About

VADDU KODDAI EAST, Jaffna, Sri Lanka
We the Maruthanayagam boys, a great gang of youngsters of Vaddukoddai East, dominated the whole Jaffna during late 90's and early 2000 with our skills in soft-ball cricket. As a group of energetic,creative and skillful kids we started a softball cricket team called WINBIRDS 0n 1995. We started practicing cricket in a small empty space, which belongs to one of our friends, which is called Maruthanayagam stadium.(the story behind this name will be posted later) We were the top soft ball team in the Chankanai division and one among the top four in Jaffna district until we dissolved our team due to the unwanted situations in Jaffna during 2006/07. Now we are settled indifferent jobs in different places. Even though we are living different lives allover the world we all are still MARUTHANAYAGAM BOYZ. ONE FOR ALL! ALL FOR ONE!

Friday, February 18, 2011

நவீன ஹைக்கூ தமிழில் ஆர்.அபிலாஷ்

பேட்ரிஷியா டொனெகன்

Patricia Donegan

மதிய வெக்கை –

சமையல் மேஜைக்கு கீழ்

கரப்பான் பூச்சி தூங்கும்

Noon heat –

The cockroach naps

Under the kitchen table

வசந்தம்

மக்கள் கூட்டங்கள்

ஒன்று, இரண்டு ஒரு புத்தர்

Spring

Crowds of people

One, two a Buddha


ஒரு வசந்த பருவக் காற்று

நானும்

தூசுதான்

Spring wind –

I too

am dust

சிவப்பு மேப்பிள் இலை

ஷவரின்

மடையில்

one red maple leaf

in the drain

of the shower

என் நண்பன் புத்தன் புக்காவஸ்கி, தமிழில் ஆர்.அபிலாஷ்

என் மேஜையில் இருக்கும் இந்தப் புத்தனை நான் கழுவியாக வேண்டும் ---
அவன் மீது முழுக்க தூசும் எண்ணெய் பசையும்
அதிகமும் அவனது நெஞ்சு மற்றும் வயிற்றில்; ஆஹ்
எத்தனையோ நெடிய இரவுகளை ஒன்றாய் பொறுத்திருக்கிறோம்;
சப்பையானவையையும் பயங்கரமானவையையும் நாங்கள் தாங்கியிருக்கிறோம்
பண்பற்ற காலங்களில்
சிரித்திருக்கிறோம் – இப்போது
குறைந்தது நான் அவனுக்கு செய்ய வேண்டியது
ஈரத் துணியால் துடைப்பதாவது தான்;
சில நீண்ட இரவுகள்
நிஜமாகவே கொடூரமாகவே இருந்துள்ளன ஆனால்
புத்தன் ஒரு நல்ல அமைதியான துணையாகவே
இருந்து வந்திருக்கிறான்; சொல்லப் போனால் அவன் என்னைப் பார்ப்பதில்லை ஆனால்
எப்போதுமே சிரித்துக் கொண்டிருப்பதாய் தெரியும் – இந்த
பீத்தனமான இருப்பை நோக்கி
சிரித்துக் கொண்டிருக்கிறான்: வேறொன்றும் இல்லை செய்வதற்கு.
“ஏன் என்னை சுத்தம் செய்கிறாய்?” அவன் கேட்கிறான், “நான் திரும்பவும்
அசுத்தமாகத் தான் போகிறேன்”
“ஏதோ சுத்தம் பேணுவதாய் கிறுக்கத்தனமாய் பாவிக்கிறேன்”, நான் பதிலிறுக்கிறேன்.
“வைனை குடி”, அவன் சொல்கிறான், “அது தான் உனக்கு நன்றாக வருவது”
“அப்போ” நான் கேட்கிறேன் “உனக்கு என்ன நன்றாக
வருமாம்?”
திரும்பச் சொல்கிறான் “உன்னைப் பார்த்துக் கொண்டிருப்பது நன்றாக வரும்”
பிறகு அவன் மௌனமாகிறான்.
குஞ்சம் வைத்த ஒரு உருள்மணிகளின் வட்டமொன்றை
ஏந்தியிருக்கிறான்.
எப்படி இவன் வந்தான்
இங்கு?

நானும் காந்தியும் by இந்திரஜித்

நானும் காந்தியும்
இந்திரஜித்

ஒரு மே மாதத்தில் பிரபாகரன் கொல்லப்பட்டதாகச் செய்தி வெளிவந்த நேரம், பொதுவாக தமிழர்கள் சோர்வாக இருந்த நேரம்.

இதை எல்லாரும் ஏற்றுக் கொள்வார்கள் என்று சொல்லமுடியாது. பிரபாகரன் இறந்த செய்தி கேட்டு உற்சாகம் அடைந்தவர்களும் உண்டு. அப்படி உற்சாகம் அடைந்தவர்கள், தங்களைப் போல் உற்சாகம் அடைந்தவர்களே அதிகம் என்று கூறிச் சிரித்தனர்.

அப்படி உற்சாகம் அடைந்தவர்களில் நீங்களும் ஒருவராக இருக்கலாம். அதை நினைத்து இப்போது சோர்வடைய வேண்டாம். அரசியல், இலக்கியம், கலை, சினிமா, மனிதாபிமானம் இப்படிப் பல துறைகள் எல்லாமே ஒரே துறையா பல துறைகளா என்ற சந்தேகம் உள்ளவர் நீங்கள். அதில் ஏதோ ஒரு துறையைச் சேர்ந்ததன் மூலம் எல்லாத் துறையிலும் சேர்ந்துவிட்டீர்கள். எனவே பிரபாகரன் இறந்த செய்தி கிடைத்ததும் நீங்கள் சிந்தித்துவிட்டீர்கள்.

உங்களை அல்ல-

நான் சொல்வது பொதுவான தமிழர்களை. அவர்களை அவ்வப்போது சந்தர்ப்பத்துக்கு ஏற்ப அப்பாவித் தமிழர்கள் என்றும் சொல்லலாம்.

அவர்கள் அனைவருமே பிரபாகரன் செய்தி கிடைத்தபோது பதறிப் போயினர். பலர் பதற முடியாமல் திகைத்து நின்றனர்.

அந்நேரத்திலும் பிறகும், பிரபாகரன் தவறியது நல்லதே என்று பல கட்டுரைகள் எழுதப்பட்டன. அவர் எப்படிச் செத்தார் என்பது பற்றி இதுவே உண்மை என்று சொல்லி குறைந்தது பத்துவிதமான சம்பவங்கள் சொல்லப்பட்டன. அவற்றில் ஒன்பது சம்பவங்கள் பொய்யாக இருந்தால்தான் ஒரு சம்பவமாவது உண்மையாக இருக்க முடியும்.

ஒவ்வொன்றும் தகுந்த ஆதாரத்தோடும், தார்மீகம் என்று சொல்கிறார்களே அதையும் சேர்த்துக் கொண்டு முன்வைக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரைகள். எழுதியவர்கள் நேரில் பார்த்தவர்கள். இல்லாவிட்டால் நேரில் பார்த்தவர்களை நேரில் பார்த்தவர்கள்.

இதில் உணர்ச்சிவசப்படுவதற்கு எதுவும் இல்லை என்று வற்புறுத்திய உணர்ச்சிமயமான கட்டுரைகள்.



அவர்கள் அறிவுஜீவிகள்.

அதற்கு அப்பால் உள்ள அப்பாவி மக்களுக்கு உண்மையில் பிரபாகரனை அவ்வளவாகத் தெரியாது. இதுதான் முக்கியமான அம்சம். ஒரு மனிதரைக் கதாநாயகனாக மேற்கொள்ளும் பெரும்பாலான மக்களுக்கு அந்த மனிதரை அவ்வளவாகத் தெரியாது. யாராக இருந்தாலும். காந்தியாக இருந்தாலும் பிரபாகரனாக இருந்தாலும்.

இருவரையுமே நன்றாகத் தெரிந்து அவர்களோடு ஒன்றாக உட்கார்ந்து மோர் குடித்தவர்கள் துடிப்பார்கள். எப்படி ஒப்பிடலாம் என்று கொதிப்பார்கள். மற்றவர்கள் அப்பாவிகள்.



எப்படிப் பார்த்தாலும் பிரபாகரன் வில்லனே என்று வாதிடும் கட்டுரையாளர்கள் மறக்காமல் தங்களை நடுநிலையாளர்கள் என்று அறிமுகம் செய்து கொண்டனர்.

வேறு சிலர் தங்களுக்கு பிரபாகரனிடம் தனிப்பட்ட ஜென்மப் பகை இருந்தாலும் அதையெல்லாம் ஒதுக்கிவிட்டு, இப்போது எல்லாவற்றிலும் இருந்து விலகி நின்று, ஒரு பொதுக் கண்ணோட்டத்தோடு பிரபாகரனைத் தாக்குவதாக வருத்தப்பட்டனர்.

பிரபாகரனின் பெயரைச் சொல்வதற்கே பயந்தவர்கள், அவரைப் பற்றிப் பல நகைச்சுவைகளைச் சொல்லிச் சிரித்தனர்.

காந்தி தோல்வி அடைந்திருந்தால் அவர் எவ்வளவு நகைப்புக்கு ஆளாகியிருப்பார் என்று ஒப்பிட்டுப் பார்க்கும்போது பிரபாகரன் நிலைமை எவ்வளவோ மேல் என்றே தோன்றுகிறது.

காந்தி மக்களை மனதில் வைத்துச் செயல்பட்டார், பிரபாகரன் தன்னை மனதில் வைத்துச் செயல்பட்டார் என்று சொல்கின்றனர்.

இதுபோன்ற பொறுக்கி எடுக்கப்பட்ட கூற்றுகள் பொதுமக்களிடையே ஏன் எடுபடவில்லை என்பது தெரியவில்லை.

பிரபாகரனை ஏன் மக்களுக்குப் பிடித்தது என்பதுதான் உண்மையில் புரியாத புதிர்.

ஒருவேளை அவர் ஒழுக்கமானவர் என்பது காரணமாக இருக்கலாம். தமிழர் தலைவர்களில் ஒழுக்கமானவர் என்ற பேச்சுக்கே இடம் இல்லாதபடி வெகுநாளாகவே நிலைமை நீடித்து அதுவே போதும் என்று பழகிவிட்டது.

பொறுக்கியாக இருக்கலாம். அது அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை என்றுதான் தமிழர் தலைவர்களை நாம் மதிப்பிடுவது வழக்கம்.

பிரபாகரன் போன்ற ஒருவரே தலைவராக இருக்க வேண்டும் என்று மக்கள் நினைத்திருக்கலாம்.



பிரபாகரன் போரில் இறந்திருந்தால் அவர் மக்களோடு நின்று மடிந்தார் என்று அவருக்கு நல்ல பெயரே வருகிறது.

அவர் தப்பித்திருந்தால், புத்திசாலித்தனமாகத் தப்பித்துவிட்டார் என்று அப்படியும் அவரை மக்கள் புகழ்கின்றனர்.

இது ஏன் என்பதுதான் நடுநிலையாளர்களின் சந்தேகம். எவ்வளவு ‘பெனடோல்’ போட்டாலும் அந்தச் சந்தேகம் தீரவில்லை.

நாம் அனைவருமே போருக்கு எதிரானவர்கள். அது தனிக்கதை. அதை இதோடு சேர்க்க முடியாது.

நம்மில் ஒருவர்கூட இன்னொருவருக்கு ஒரு தீங்கும் செய்ததில்லை. அதை நினைத்து நாம் ஒவ்வொரு நாளும் காலையில் பல்விளக்கும்போது சிரித்துக் கொள்கிறோம்.

உண்மையில் பிரிட்டிஷ்காரர்களும் மனிதர்களே. அவர்களுக்கு இடையூறாகப் பல காரியங்கள் செய்ததுகூட காந்தி போன்றவர்களால்தான் முடியும். நாம் என்றால் யாராவது பத்திரிகை நடத்தினால் அது பற்றிக் கட்டுரை எழுதலாம். மற்றபடி ஏதாவது செய்வதாக இருந்தாலும் வேலை எத்தனை மணிக்கு முடிகிறது என்பதைப் பொறுத்தது.



தமிழர்கள் வன்முறைக்கு முற்றிலும் எதிரானவர்கள். சாதாரண குண்டர் கும்பலைக் கூட அவர்கள் அருவருப்போடுதான் பார்க்கின்றனர்.

எனவே பிரபாகரனிடத்தில் இருந்த வன்முறையை அவர்கள் விரும்பியிருக்க முடியாது.

அவர் நல்லவர் என்பதுதான் மக்களைக் கவர்ந்திருக்க வேண்டும்.

பிரபாகரன் மரணச் செய்தியில் நடுநிலையாளர்களுக்கு மட்டும்தான் சந்தோஷம்.

சாதாரண மக்களுக்கு அதில் மகிழ்ச்சி இல்லை.

அதைப் புரிந்துகொள்ள முடிகிறது.

யார் இறந்தாலும் அந்த இழப்பை உடனே உணரக் கூடியதுதான் அரசியல் கலக்காத மனித மனம்.

சாதாரண பிரபாகரனிடம் சாதாரண மக்கள் எதைப் பார்த்தனர்?

அரசியல் தலைவர் என்றாலே அவர் ஒரு பொறுக்கி, தெருவில் போகும் பெண்களை எல்லாம் பொறுக்குவார், இங்கொரு மனைவி அங்கொரு மனைவி என்று அலைவார், எந்த நேரத்தில் யார் பக்கம் இருப்பார் என்று சொல்ல முடியாது. இப்படியே கேட்டுக் கேட்டு அலுத்துப் போய்விட்டதால் மக்களுக்கு காந்தி போன்ற ஒருவரை, பிரபாகரன் போன்ற ஒருவரைப் பிடிக்கிறது.

அவர்களுடைய அரசியல் அணுகுமுறை, போராட்டம் ஆகியவற்றோடு எந்தத் தொடர்பும் இல்லாத அப்பாவி மக்களைச் சொல்கிறேன்.

எனக்கு காந்தியைப் பிடிப்பதற்கு முக்கியமான காரணம், உங்களுக்கு அவரைப் பிடிப்பதற்கான அதே காரணம்தான்.

ஒருமுறையேனும் மனுஷ்ய புத்திரன்

யாரையும்
பதற்றமடைய வைக்காமல்

யாரையும்
தற்கொலைக்குத் தூண்டாமல்

யாரையும்
மனம் குலைந்து அலையச் செய்யாமல்

யாரையும்
ரத்த வேட்கை கொள்ளச் செய்யாமல்

யாரையும்
கண்ணீர் விடச் செய்யாமல்

யாரையும்
அச்சுறுத்தாமல்

யாரையும்
சந்தேகத்தின் நெருப்பில் வாட்டாமல்

யாரையும்
சபிக்க விடாமல்

யாரையும்
தன்னைத்தானே
ஏமாற்றிக்கொள்ளச் செய்யாமல்

யாரையும்
தனது முகத்தை தாமே கண்ணாடியில்
ஏக்கத்துடன் பார்க்கச் செய்யாமல்

யாரையும்
தனது தவறு எங்கே என்று தவிக்க விடாமல்

யாரையும்
தன்னையோ பிறரையோ
சவுக்கால் அடிக்கச் செய்யாமல்

யாரிடமிருந்தும்
பறித்துக் கொள்ளாமல்

ஒருமுறையேனும்
ஒரு காதலையேனும்
ஒரு வாழ்க்கையில்
நீ அடையக் கூடும்

இடைவெளியில் மனுஷ்ய புத்திரன்

எப்போதும் யாருக்காகவோ
காத்திருக்கும் இடைவெளியில்தான்
நீ என்னை அழைக்கிறாய்

காத்திருப்பதன் அவமானத்திலிருந்து
ஒரு சிறிய வலி நிவாரணியைப்போல
நான் உன்னிடம் வருகிறேன்

நான் அமர்ந்துகொள்ள
ஒரு சிறிய முக்காலி போதும்

அவ்வளவு சூடாக இல்லாத தேநீரை
அருந்துவதில் எனக்கு
எந்தப் பிரச்சினையும் இல்லை

உன் வரவேற்பறையில் இருக்கும்
மூன்று தினங்களுக்கு முந்தைய
பத்திரிகையில்
எனக்காகப் புதிய செய்திகள் இல்லாமலில்லை

நீ யாருக்காகக் காத்திருந்தாயோ
அவரின் சாயல்களில்
ஒன்றுகூட என்னிடம் இல்லை என்பது
உன்னைப்போலவே எனக்கும் தெரியும்

இன்னொருவராக
நான் இல்லாதபோதும்
இன்னொருவருக்காக இருப்பதன்
ஆபத்தான விளையாட்டை
விரும்பி ஏற்கிறேன்

நீ யாரிடமோ உன்னை நிரூபிக்க விரும்பி
புதிய அலங்கார உடைகளை அணிகிறாய்
நான் அவற்றின் விலைப்பட்டியலை
ஆர்வமுடன் படிக்கிறேன்

நீ யாரையோ அணைத்துக்கொள்ள
விரும்பி நறுமணத் தைலங்களைப்
பூசிக் கொள்கிறாய்
நான் அவை பிறந்துவந்த மலர்களைப் பற்றி
யோசித்துக்கொண்டிருக்கிறேன்

என் தனிமையைப் பற்றி
நீ அவ்வளவு கரிசனத்துடன் கேட்கிறாய்
அப்போதுதான்
நான் வாழ்ந்துகொண்டிருப்பதற்கு
தனிமை என்று
ஒரு பெயர் இருப்பதை அறிகிறேன்

உன்னுடைய காத்திருப்பு
முடிவுக்கு வரும்போது
அமைதியிழக்கத் தொடங்குகிறாய்
என்னைப் போன்ற நல்ல நண்பர்கள்
இப்போது அரிதாகிவிட்டார்கள்
என்பதை ஒரு வாக்கியமாகக் கூறுகிறாய்

எனது கைப்பையை எடுத்துக் கொள்கிறேன்
ஒரு முறை
உனது கழிவறையை உபயோகிக்கிறேன்
புன்னகையுடன் விடைபெற்று
அந்தியின் மஞ்சள் வெளிச்சத்தில்
இறங்கி நடக்கிறேன்

எதுவாக இருந்தேனோ
அதுவாக

வாழ்க்கையை மாற்றுவதற்காக வருபவர்கள்

மனுஷ்ய புத்திரன்



வாழ்க்கையை மாற்றுவதற்காக
வருபவர்கள்
ஒரு நாளும்
வாழ்க்கையை மாற்றுவதற்காக
வருபவர்களைப்போல
வருவதே இல்லை

அவர்கள்
மிகவும் எளிய
தோற்றத்தில் வருகிறார்கள்
மிகவும் எளிய
சொற்களின் வழியே வருகிறார்கள்
யாரையோ பார்க்க வந்ததுபோல் வந்து
எதையோ கேட்க வந்தது போல கேட்டு
அவ்வளவு நோக்கமற்றவர்களாக
அவ்வளவு சந்தேகத்திற்கிடமில்லாதவர்களாக
ஒரு கணம் எச்சரிக்கையடைந்து
நீங்கள் வாழ்க்கையை மாற்றத்தானே
வந்தீர்கள் என்று
நாம் கேட்கவே செய்கிறோம்

இல்லை நாங்கள்
நீங்கள் வழியில் தொலைத்த ஒரு பொருளைத்
திரும்பத் தரவே வந்தோம் என்கிறார்கள்
இல்லை நாங்கள்
உங்கள் பெயருள்ள வேறொருவரைத்
தேடியே வந்தோம் என்கிறார்கள்

வாழ்க்கையை மாற்றுவதற்காக வருபவர்கள்
முதலில் நம்மிடம்
மிகவும் சிறிய கேள்விகளையே
கேட்கத் தொடங்குகிறார்கள்
நாம்தான் அவர்களுக்கு
அபாயகரமான தகவல்களை அளிக்கிறோம்

மிகச் சிறிய பரிசிலிருந்துதான்
தமது அன்பை வெளிப்படுத்துகிறார்கள்
நாம்தான் அதற்கு
அவ்வளவு பெரிய விலையை
நிர்ணயிக்கிறோம்

அவர்கள் முதலில் குடிப்பதற்குக் கொஞ்சம்
தண்ணீர்தான் கேட்கிறார்கள்
நாம்தான் அதில் தவறுதலாக
வேறு எதையோ கலந்து விடுகிறோம்

இந்த வரவேற்பறையில்
சற்று நேரம் இருக்கலாமா என்றுதான்
அவர்கள் கேட்கிறார்கள்
நாம்தான் நமது வீட்டின்
ஒவ்வொரு அறையாக
அவர்களுக்குத் திறந்து காட்டுகிறோம்

வாழ்க்கையை மாற்றுவதற்காக வருபவர்கள்
முதலில் நாம் வாழ்வது
ஒரு வாழ்க்கையே அல்ல என்று
நம்மை நம்ப வைக்கிறார்கள்

பிறகு
இன்னொருவர் வாழ்க்கையை
நாம் எப்படி வாழ்வது என்று
நமக்குக் கற்றுத் தருகிறார்கள்

நீங்கள்
எப்போதும் ஒருவருடைய
கைகளைத்தான் தொடுகிறீர்கள்
பதிலுக்கு
அவர்கள் உங்கள் இதயத்தை தொடும்போது
நீங்கள் கைகளை
விடுவித்துக் கொள்ளவேண்டும்
என்பதை மறந்து விடுகிறீர்கள்

ஒருவர்
உங்களுடைய ஆடைகளைத்தான்
அவ்வளவு மிருதுவாகத் தொடுகிறார்
நீங்கள் உங்கள் சருமத்தை தொடுவது போல
அதைப் புரிந்துகொண்டு
உணர்ச்சிவசப்படுகிறீர்கள்

வாழ்க்கையை மாற்றுவதற்காக வருபவர்கள்
ஒருநாள் உண்மையாகவே
நம் வாழ்க்கையை மாற்றுகிறார்கள்
நாம் குழப்பத்துடன்
இனி எங்கிருந்து தொடங்குவது
என்று கேட்கிறோம்

எதுவும் மாறவில்லை
இதுவும் உங்கள்
அதே பழைய வாழ்க்கைதான்
திரும்பிப்போய்விடுங்கள்
என்கிறார்கள் அமைதியாக

பசிக்கிறது மனுஷ்ய புத்திரன்

பசிக்கிறது
மனுஷ்ய புத்திரன்



பசிக்கிறது
நான் அதைப்பற்றியே
நான்கு மணிநேரமாக
சிந்தித்துக்கொண்டிருக்கிறேன்
பிறகு பசியைப் பற்றி எழுதப்பட்ட
கவிதைகளை
கதைகளை
தத்துவங்களை

பசிக்கிறது
முழுமையாக
ஒரு மிருகத்தைப்போல
நான் அதை உணர்ந்துகொண்டிருக்கிறேன்
வேட்டையாடும் ஒரு மிருகமாக
வேட்டையாடப்படும் ஒரு மிருகமாக

பசிக்கிறது
நான் அதைக் கவனிக்கிறேன்
அது மெதுவாக ஊர்ந்து செல்கிறது
கொஞ்சம் மறைகிறது
தலையைத் தூக்கிப் பார்க்கிறது
வெறுப்புடன் விஷத்தை உமிழ்கிறது

பசிக்கிறது
நான் தண்ணீர் குடிக்கிறேன்
அது புகைப்படத்தில் இருக்கும்
ஒரு பெண்ணைப் போல
கொஞ்சம் அமைதி தருகிறது
பிறகு அது ஒரு புகைப்படம்
என்பது நினைவுக்கு வந்து விடுகிறது

பசிக்கிறது
நான் கொஞ்சம் கருணையை வேண்டுகிறேன்
அது விலையுயர்ந்ததாக இருக்கிறது
என்னிடம் இருக்கும் பணம்
எப்போதும் குறைவாகவே இருக்கிறது
மலிவு விலையில் கிடைக்கும் கருணை
பயனற்றதாகப் போய்விடுகிறது

பசிக்கிறது
நான் வீடு முழுக்கத் தேடுகிறேன்.
பச்சை காய்கள்
பச்சை தானியங்கள்
பச்சை முட்டைகள்
ஒரு வேகவைக்கப்படாத பிரபஞ்சத்தை
ஒரு பசித்த மனிதன் எதிர்கொள்கிறான்

பசிக்கிறது
என்னைப் போலவே நள்ளிரவு 2 மணிக்கு
ஒரு டிராகுலாவுக்குப் பசியெடுக்கிறது
அவன் ஒரு இளம்பெண்ணின்
ரத்தத்தைப் பருகுகிறான்
நான் அவன் கண்களையே
பார்த்துக்கொண்டிருக்கிறேன்

பசிக்கிறது
பிறந்த ஒருவாரமே ஆன
ஒரு குழந்தை அகாலத்தில் வீரிட்டு அழுகிறது
பால் சுரக்காத
அம்மாவின் முலையைச் சப்பிக்கொண்டே
அது தூங்கிவிடுகிறது

பசிக்கிறது
நான் முக்கியமான ஏதோ
ஒன்றை மறந்துவிடுகிறேன்
எவ்வளவு நினைவுபடுத்தினாலும்
பசிக்கிறது என்பது மட்டுமே
நினைவுக்கு வந்துகொண்டிருக்கிறது

பசிக்கிறது
ஒரு பல்லி சப்தமில்லாமல்
ஒரு கொசுவைக் கவ்விப் பிடிக்கிறது
நான் அதற்கு
நல் வாழ்த்துக்களைக் கூறுகிறேன்
அது எனக்கு
அவசியமான ஒன்றைக் கற்பிக்கிறது

பசிக்கிறது
அது போதையூட்டுவதாக இருக்கிறது
எந்தப் போதைப் பொருளையும்விட
எல்லாவற்றையும் மறக்க வைக்கிறது

பசிக்கிறது
பசித்த மனிதர்கள் சாப்பிடவே விரும்புகிறார்கள்
ஆனால்
அவர்கள் புரட்சி செய்ய
அழைக்கப்படுகிறார்கள்
கொலைசெய்யத் தூண்டப்படுகிறார்கள்
தங்கள் வாழ்க்கையைக் கொடுக்கிறார்கள்

பசிக்கிறது
அது ஒரு நிராகரிப்பு
நம்மால் அதை
சகித்துக்கொள்ள முடியவில்லை
அது ஒரு புறக்கணிப்பு
அந்த அநீதியை நம்மால்
தாங்கவே முடியவில்லை

பசிக்கிறது
பசியுடன்
கூட்டிக் கொடுக்கிறார்கள்
சோரம்போகிறார்கள்
மண்டியிடுகிறார்கள்
திருடுகிறார்கள்
தண்டிக்கவோ மன்னிக்கவோபடுகிறார்கள்

பசிக்கிறது
கண்ணீர் வருகிறது
நாம் காத்திருக்கிறோம்
நாம் பிரார்த்தனை செய்கிறோம்
நாம் கனவு காண்கிறோம்

பசிக்கிறது
அது அவ்வளவு
சிறந்த உணர்ச்சியாக இருக்கிறது
அது அவ்வளவு
அந்தரங்கமானதாக இருக்கிறது
நமது புலன்கள் எல்லையற்ற பிரகாசத்துடன்
ஒளிரச் செய்கிறது

பசிக்கிறது
அது அவமானமாக இருக்கிறது
பசித்த ஒருவன்
தற்கொலை செய்துகொள்கிறான்
அது பசியினால் அல்ல

தீராதது மனுஷ்ய புத்திரன்

எவ்வளவு இருக்கிறாய்
எவ்வளவு இருக்கிறாய்
எவ்வளவு இருக்கிறாய்
எவ்வளவு இருக்கிறாய்

எடுத்துக் கொள்ளவோ
இழந்து போகவோ
போதுமா
இந்த ஒரு பொழுது
இந்த ஒரு வாழ்க்கை?

அங்கே கடவுள்கள் பிறப்பதற்கு முன் manusiyaputhiran

அங்கே ஒரு கடவுள் பிறந்தார்
அங்கே ஒரு அரசர்
தனது கடவுளுக்கு ஆலயம் எழுப்பினார்
கடவுள்கள் பிறப்பதற்கு முன்பு
அரசர்கள் வருவதற்கு முன்பு
அங்கே யார் இருந்தார்கள்
என்பது நமக்குத் தெரியாது

நான் உள்ளுணர்விலிருந்து
இந்தக் கவிதையை எழுதுகிறேன்
நம்பிக்கைகளிருந்தல்ல
நம்பிக்கையின்மைகளிலிருந்து
இந்த வரிகளைத் தொடங்குகிறேன்
இதன் அடுத்த வரியைப் பற்றி
எனக்கு எதுவும் தெரியாது

அங்கே ஒரு கோயில் இருந்தது
அங்கே ஒரு மசூதி இருந்தது
கோயில்களும் மசூதிகளும்
எழுப்பப்படுவதற்கு முன்னர்
அவை அழிக்கப்படுவதற்குமுன்னர்
அங்கே ஒரு காலம் இருந்தது
பிறகு அது அழிக்கப்பட்டது

நான் எனது வரலாற்றுப் புத்தகங்களை
எரித்துவிடுகிறேன்
நீங்கள் உங்கள் வரலாற்றுப் புத்தகங்களில்
காறித் துப்புங்கள்
நாம் அவற்றை இனி
ஒருபோதும் பயன்படுத்த முடியாது.
ஷேக்ஸ்பியர் வாழ்க்கையைப் பற்றி
சொன்னதுதான் இதற்கும்:
அது ஒரு மூடனால் சொல்லப்பட்ட
புனைகதை
சத்தமும் சினமும் நிறைந்த
அற்பமான புனைகதை



அகழ்வாராய்ச்சிகள்
முக்கியமான தடயங்களைத் தருகின்றன
அவை வரலாறுகளை மாற்றி எழுதுகின்றன
புதிய வரலாறுகளை எழுதுகின்றன
தீர்ப்புகளை எழுதுகின்றன

ஆனால் அதில் ஒரு முக்கியமான
தடயம் மறைக்கப்பட்டுவிட்டது
அது நம் அனைவரையும் மனம்
உடையச் செய்வது
நான் அந்தத் தடயத்தை
இந்த வரிகளுக்குள் ஒளித்து வைக்கிறேன்
நீங்கள் அதைக் கண்டுபிடிக்கலாம்
இன்னும் உங்களுக்கு
ஒரு இதயம் இருக்கிறது
ஒரு சந்தர்ப்பம் இருக்கிறது

இப்போது அங்கே என்ன இருக்கிறது?
இடிபாடுகள் இருக்கின்றன
வெற்றிடம் இருக்கிறது
துப்பாக்கி ஏந்திய காவலர்கள் இருக்கிறார்கள்
கடந்து செல்லும்
பறவைகளின் நிழல்கள் இருக்கின்றன

நீதிபதிகள் நம்பிக்கைகளின் பேரால்
தீர்ப்புகள் வழங்குகிறார்கள்
நீதியின் பெயரால் வழங்கப்படும்
நீதியைவிட
நம்பிக்கையின் பெயரால் வழங்கப்படும்
நீதி நமக்குப் பரிச்சயமானது
நாம் புரிந்துகொள்ளக் கூடியது

நமது அரசர்கள்
நம்பிக்கையின் பெயரால்
நாடுகளை வென்றார்கள்
நம்பிக்கையின் பெயரால்
வெல்லப்பட்டவர்களை
கழுமரங்களில் சொருகிவைத்தார்கள்
மைதானங்களை
சிரத்சேதம் செய்யப்பட்ட தலைகள்
இமைப்பதைப் பார்த்தபடி
தமது நம்பிக்கைகளை உறுதி செய்தார்கள்

ஔரங்கசீப்போ
சத்ரபதி சிவாஜியோ
நம்பிக்கையற்றவர்களாக இருந்திருந்தால்
இவ்வளவு புனித யுத்தங்களை
நாம் பார்த்திருக்க மாட்டோம்

காந்தி ஒரு நம்பிக்கையற்றவராக
இருந்திருந்தால்
இந்த மக்களுக்கு இப்படிப்பட்ட
ஒரு விடுதலையை அளித்திருக்க மாட்டார்



ஒரு நீதிபதியை வழிநடத்துவது போல
நம்பிக்கை ஒவ்வொரு மனிதனையும்
இப்போது வழிநடத்துகிறது

அந்த இளைஞனுக்கு என்ன தெரியும்
இஸ்லாத்தின் தர்மம் பற்றி
அவன் எதையும் கற்கவேயில்லை
ஐந்து நேரமும் தொழுகிறான்
ஒரு சிறிய வேலைக்குப் போகிறான்
அவனது சகோதரிகள் அவனை நம்புகிறார்கள்
ஒரு நாள் காணாமல் போகிறான்
அவனது புகைப்படம்
பத்திரிகைகளில் வெளிவருகிறது
அவன் நம்பிக்கையின் பெயரால்
பிறந்த நாள் விருந்திற்குக் கூடியவர்களைக்
கொலை செய்கிறான்

அந்த சன்னியாசிக்கு என்ன தெரியும்
இந்து தர்மம் பற்றி
அவன் எதையும் கற்கவே இல்லை
கிடைத்ததை உண்டு
கிடைத்த இடத்தில் தூங்கி
கங்கையில் குளித்து எழுகிறான்
வாளை உயர்த்தி
சூரியனை நோக்கி சந்தியா வந்தனம்
செய்தபடி
நம்பிக்கையின் பெயரால்
யாரோ ஒருத்தியின் வயிற்றைக் கிழிக்கிறான்

எவ்வளவு கொன்றாலும்
ஜனங்கள் மிச்சம் இருக்கிறார்கள்
கூட்டம் கூட்டமாக எல்லா இடத்திலும்
பெருகிக்கொண்டே இருக்கிறார்கள்
மனித அழிவு நமக்கு
எந்த அதிர்ச்சியையும் தருவதில்லை
இது ஒரு அலுப்பூட்டும் வேலை
ஏராளமான மனிதர்கள் மிச்சமிருக்கிறார்கள்
ஏராளமான கோயில்களுடன்
ஏராளமான மசூதிகளுடன்
ஏராளமான நம்பிக்கைகள்
இன்னும் மிச்சமிருக்கின்றன

நம்புங்கள்
நான் ஒரு மத சார்பற்றவன்
நான் நடு நிலையாகவே
கருத்துக்களைத் தெரிவிக்கிறேன்
எல்லாத் தரப்பு நியாயங்களையும்
நான் பேசுகிறேன்
நான் அந்த நாடகத்தை ஆடியே தீரவேண்டும்
இந்துவாக இருப்பது ஒரு தேர்வு அல்ல
இஸ்லாமியனாக இருப்பது ஒரு தேர்வு அல்ல
மத சார்பற்றவனாக இருப்பதும்
ஒரு தேர்வு அல்ல

கடவுள்
அங்கே பிறப்பதற்கு முன்பு
நிறைய மனிதர்கள் அங்கே பிறந்திருக்கிறார்கள்
கடவுள்களின் ஆலயங்கள்
அங்கே எழுப்பப்படுவதற்கு முன்பு
அது வேட்டைப் பொருள்களைப்
பங்கிட்டுக் கொள்ளும் நிலமாக இருந்தது
அது ரத்த வாடையாலும்
மாமசத்தின் மிச்சங்களாலும் நிறைந்திருந்தது
கருணையின் கடவுள்
தவறான ஒரு இடத்தில் வந்து பிறந்தார்
கருணையே வடிவான இறைவனுக்கு
ஒரு அரசன் தவறான இடத்தில்
ஒரு ஆலயம் எழுப்பினான்

இப்போதும் அந்த இடம்
வேட்டைப் பொருள்களின் பங்கிடும்
நிலமாக இருக்கிறது
யாரெல்லாம் எதையெல்லாம்
வேட்டையாடினீர்கள்
என்று உங்களுக்குத் தெரியும்
ஒருவர்கூட அதை
பயத்தாலோ
வெட்கத்தாலோ
குற்ற உணர்வாலோ
மறைக்க முயற்சி செய்யவில்லை
நீங்கள் நம்பிக்கையின்
பெயரால் வேட்டையாடினீர்கள்
நீங்கள் ஒருபோதும் தண்டிக்கப்பட மாட்டீர்கள்
நம்பிக்கை என்பதே
எப்போதும் இன்னொருவர்மீதான
தண்டனையாக இருக்கும்போது92ங்கள் விசாரிக்கப்பட மாட்டீர்கள்
மறுமை நாளில்கூட

கொஞ்சம்
அமைதியாக இருங்கள்
கொஞ்சம்
சமாதான முயற்சிகளில் பங்கெடுங்கள்
கொஞ்சம்
தேர்தல் அறிக்கைகளைத் தாமதியுங்கள்

அது பங்கிடப்படுகிறது

நம்பிக்கையின் தராசில்
உங்கள் வேட்டைப் பொருள் நிறுக்கப்படுகிறது
கொஞ்சம்
அமைதியாக இருங்கள்
மேல் முறையீடுகளுக்கு நேரமிருக்கிறது
இன்னும் நீதிபதிகள் இருக்கிறார்கள்
கொலைகளுக்கு
இன்னும் எவ்வளவோ அவகாசம் இருக்கிறது
கொல்லப்படுவதற்கு
இன்னும் எவ்வளவோ
ஜனங்கள் இருக்கிறார்கள்

அது பங்கிடப்படுகிறது.

thanks uyirmmai

name