About

VADDU KODDAI EAST, Jaffna, Sri Lanka
We the Maruthanayagam boys, a great gang of youngsters of Vaddukoddai East, dominated the whole Jaffna during late 90's and early 2000 with our skills in soft-ball cricket. As a group of energetic,creative and skillful kids we started a softball cricket team called WINBIRDS 0n 1995. We started practicing cricket in a small empty space, which belongs to one of our friends, which is called Maruthanayagam stadium.(the story behind this name will be posted later) We were the top soft ball team in the Chankanai division and one among the top four in Jaffna district until we dissolved our team due to the unwanted situations in Jaffna during 2006/07. Now we are settled indifferent jobs in different places. Even though we are living different lives allover the world we all are still MARUTHANAYAGAM BOYZ. ONE FOR ALL! ALL FOR ONE!

Saturday, August 28, 2010

கவிக்கோ அப்துல் ரகுமான் Collections

கண்ணகியின் கதையைச் சொல்ல தலையணை சைஸில் நூல் தேவைப்பட்டது இளங்கோவடிகளுக்கு. அதன் சாரம்சத்தை ஒரு சில வரிகளிலேயே சொல்லி முடித்து விட்டார் கவிக்கோ அவர்கள்.
“பால் நகையாள்
வெண்முத்துப் பல் நகையாள்
கண்ணகியாள் கால் நகையால்
வாய் நகைபோய்க்
கழுத்து நகை இழந்த கதை “.
அருஞ்சொற்பொருள் :
பால் நகையாள் = பால் உணர்ச்சி தோன்றுகிற மாதிரி சிரிக்காதவள்
வெண்முத்துப் பல் நகையாள் = முத்துப் போன்ற பற்களை உடையவள்
கால் நகையால் = காற் சிலம்பினால்;
வாய் நகை போய் = புன்னகை மறைந்துப்போய்
கழுத்து நகை = மாங்கல்யம் (தாலி)
சிலம்புக் கதையை சொல்ல வந்த கவிக்கோ, நகை என்ற வார்த்தையை வைத்து சொற்சிலம்பம் ஆடியிருப்பது அவரது கவித்திறனைக் காட்டுகிறது
இதைப்போலவே கம்பன் கழகத்தில் நடந்த ஒரு கவியரங்கில் கைகேயிக்காக கவிதை பாடினார் கவிக்கோ.
“கூனி இவளை வளைக்க
வரங்களுக்காக
நாணை இழுத்தாள்.
அது
அவள் மங்கள நாணையே
வாங்கிக்கொண்டது”
இந்த சொல் விளையாட்டு கவிக்கோவிற்கு கைவந்தக் கலை.

கவிக்கோ அப்துல் ரஹ்மானின் collectios

’இறைவா எனக்குப்
புன்னகைகளைக் கொடு’ என்று
பிரார்த்தித்தேன்
அவன் கண்ணீரைத் தந்தான்
‘வரம் கேட்டேன்
சாபம் கொடுத்து விட்டாயே’
என்றேன்
இறைவன் கூறினான்:
‘மழை வெண்டாம்
விளைச்சலை மட்டும் கொடு’ என்று
எந்த உழவனாவது கேட்பானா’
ஆனால் நீ
அப்படித்தான் கேட்கிறாய்
கண்ணிரில் புன்னகையும்
புன்னகையில் கண்ணீரும்
ஒளிந்திருப்பதை
நீ அறிய மாட்டாய்
உண்மையைச் சொல்வதானால்
கண்ணீர் கண்களின் புன்னகை
புன்னகை இதழ்களின் கண்ணீர்’
வைகறைப் பொழுதில் மலர்களின் மீது
பனித்துளிகளை
நீ கண்டதில்லையா?
புன்னகை
தன்னைக் கண்ணீரால்
அலங்கரித்துக் கொள்ளும்
அற்புதம் அல்லவா அது!
மழை மேகங்களில்
மின்னல் உதிப்பதை
நீ பார்த்ததில்லையா?
கண்ணீரில் இருந்து
சிரிப்புப் பிறக்கும்
அழகல்லவா அது?
முத்து என்பது என்ன?
சிப்பிக்குள் இருந்து
தவம் செய்யும் கண்ணீர்த் துளி
புன்னகையாகும் அதிசயம் தானே அது
கன்ணீரில் மலரும்
புன்னகைப் பூக்கள்
வாடுவதில்லை என்பதை
அறிவாயாக!
மேலும்
கண்ணீர்தான்
உன்னைக் காட்டுகிறது
புன்னகையோ
சில நேரங்களில்
உனக்கு திரையாகிவிடுகிறது
‘God, give me smiles,’ I prayed
He gave me tears.
I asked for a boon
And you have cursed me’ – I said
God said:
Your prayers is like that of a farmer
Who wants a good harvest
But not the rains.
You do not know
That there are smiles in tears
And tears in smiles
To tell the truth,
Tears are the smiles of the eyes
And the smile, tears shed by the mouth
Have you not seen the dew drops
On flowers
At dawn?
That is the miracle of a
smile decorating herself with tears!
Have you not seen the lightning flash
Hidden in the clouds?
That is the beauty of the smile
Being born of tears!
And, what my son, is the pearl?
That is the tear-drop
Doing penance inside an oyster
And the mystery of its
Being transformed into a smile
Know that the smile-flowers
Which spring from tears
Neither wilt nor wither
Again it’s the tears
That show who you are!
While the smile
Many times hides the real you!
Thanks to : Varalotti for Translation – Indus Ladies.com
கவிக்கோ அப்துல் ரஹ்மானின்
ஆலாபனை என்ற தொகுதியிலிருந்து

கவிக்கோ அப்துல் ரகுமான் Collectios

1.
‘பித்தன்’ ‘பித்தன்’ என்ற
கூச்சல்களையும்
கற்களையும்
அவன் மீது
எறிந்துகொண்டிருந்தார்கள்.
அவன் சிரித்துக்கொண்டிருந்தான்.
அவன் காயங்களும்
சிரித்துக்கொண்டிருந்தன.
அப்படித்தான் அவனை
முதன் முதலாகப் பார்த்தேன்.
நீ பித்தனா? என்று கேட்டேன்.
நீ கல்லா? என்றான்.
நான் காயப்பட்டேன்.
நீ எப்படிப்
பித்தன் ஆனாய்? என்றேன்.
ஒருமுறை தற்செயலாய்
உண்மையைப்
பின் பக்கமாய்ப்
பார்த்துவிட்டேன்.
அப்போது
சகல இரவுகளுக்குமான
சூரியோதயம் நடந்தது.
திரைகள் விலகின.
எதிர்ப்பதங்கள்
கைகோத்து
நடனமாடக்கண்டேன்.
முரண்கள்
முகமூடியைக் கழற்றிவிட்டு
முத்தமிடக் கண்டேன்.
காலமும் இடமும் மறைய
எல்லாம்
ஒன்றாவதைக் கண்டேன்.
உண்டும் இல்லையும்
அர்த்தம் இழந்தன.
அந்தத் தருணத்தில்
அறிவுச் சிறையிலிருந்து
நான் விடுதலை ஆனேன்.
என்றான்.
அவர்கள் ஏன் உன்மீது
கல்லெறிகிறார்கள்? என்றேன்.
நான் அவர்களுடைய
அந்தரங்கத்தின் கண்ணாடி.
அதனால்தான் என்னை
உடைக்கப் பார்க்கிறார்கள் என்றான்.
ஏன்?என்றேன்.
அவர்கள்
வெளிப்படுவதற்கு
பயப்படுகிறார்கள்.
அவர்கள்
வேடங்களில்
வசிக்கிறார்கள்.
அது அவர்களுக்கு
வசதியாக இருக்கிறது.
வேடம் கலைந்தால்
மேடை போய்விடும்.
நான் அவர்களுடைய
அம்பலம்.
கவனி!
அம்பலம்
என் மேடையல்ல.
நடனம்.
அதனால்தான் என்னைப்
பித்தன் என்கிறார்கள் என்றான்.
நான் உடைந்தேன்.
காலம் காலமாய்த்
திரண்டிருந்த சீழ்
வடிந்தது.
(கவிக்கோ அப்துல் ரகுமானின் “பித்தன்” கவிதைத் தொகுப்பிலிருந்து)

2.
ஆன்மாவின் விபச்சாரம்


உலகுக் கெல்லாம்
ஒருவனே தலைவன்
தலைவணக் கம்அந்தத்
தலைவனுக் கேயென
அறவுரை கூறிய
ஆன்றோர் களையே
அவதாரம் என்பதும்
அவரடி வீழ்வதும்
தலைவனை ஆகழும்
தற்குறித் தனமே
அரும்பிய துருவமீன்
அதனை நோக்கியே
திரும்ப வேண்டிய
திசைகாட் டியின்முள்
மின்மினிக் கெல்லாம்
மேனி திருப்பினால்
கப்பல் எப்படிக்
கரைபோய்ச் சேரும் ?
தலைவன் ஒருவனைத்
தலையால் வணங்குவதே
தலைகற் பாகும்
தலைவனை அன்றி
மற்ற வற்றை
மகேசன் என்றே
தொழுவது கொடிய
தொழுநோய் ஆகும்
மேலும் அது
ஆன்மா செய்யும்
விபச்சாரம் ஆகும்
- கவிக்கோ அப்துல் ரகுமான்

3. ராவணனை எல்லோரும் வில்லனாகப் பார்க்கையில் கவிக்கோ அவர்களின் பார்வை சற்று வித்தியாசமாக இருந்தது.
இருகண் படைத்தவனே
இவள் அழகில் எரிந்திடுவான்!
இருபது கண் படைத்த நான்
என்ன செய்வேன்?
என்று சீதையைப் பார்த்து ராவணன் சொல்வதாக புனைந்த கவிதை அவரை பிற கவிஞர்களிடமிருந்து வேறுபடுத்திக் காண்பித்தது.

4. கஜல் ஓர் அறிமுகம்.
‘கஜல்’ அரபியில் அரும்பி, பாரசீகத்தில் போதாகி, உருதுவில் மலர்ந்து மணம் வீசும் அழகான இலக்கிய வடிவம்.
‘கஜல்’ என்றாலே காதலியுடன் பேசுதல் என்று பொருள். கஜல் பெரும்பாலும் காதலையே பாடும், அதுவும் காதலின் சோகத்தை. ‘கஜல்’ இரண்டடிக் கண்ணிகளால் ஆனது. ஒரு கண்ணிக்கும் அடுத்த கண்ணிக்கும் கருத்துத் தொடர்பு இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இந்த சுதந்திரத்தை நான் எடுத்துக் கொண்டிருக்கிறேன்.
- அப்துல் ரகுமான்.
அப்துல் ரகுமான், கஜல் எனும் கவிதை வடிவத்தை தமிழுக்கு அறிமுகப்படுத்திய முன்னோடிக் கவிஞர்களில் ஒருவர். ஆனால்,உருதுவில் ‘மிர்சாகாலிப்’ தான். கஜல் என்றாலே அதில் ‘மிர்சாகாலிப்’பின் வாசம் வீசும்.’ என்கிற அளவுக்கு அதில் அவர் சிறந்த கவிஞர். அவரின் கஜல் ஒன்று…
காதல் என்பது
நம் வசத்தில் இல்லை
அது ஒரு
வினோதமான நெருப்பு!
பற்றவைத்தால் பற்றாது
அணைத்தால் அணையாது!
- மிர்சாகாலிப்
அப்துல் ரகுமானின் கஜல் துளிகள் சில…
நாம்
நிர்வாணமாக இருந்தோம்
ஆடையாகக் கிடைத்தது
காதல்
*******
என் உயிரைக்
காதலில்
ஒளித்து வைத்துவிட்டேன்
மரணமே!
இனி என்ன செய்வாய்?
*********
உன் முகவரி
தேடி அலைந்தேன்
கிடைத்துவிட்டது
இப்போது
என் முகவரி
தேடிஅலைகிறேன்.
*******
மரணம்
உன்னைவிட நல்லது
வாக்களித்தும்
நீ வரவில்லை
வாக்களிக்காதிருந்தும்
அது வந்துவிட்டது
************
என் கனவு
உன்முன் ஏந்திய
பிச்சை பாத்திரம்
*******
உன் கண்களால்தான்
நான் முதன் முதலாக
என்னைப் பார்த்தேன்.
- அப்துல் ரகுமான்

4.

Monday, August 23, 2010

ஊனமுற்ற இராணுவ வீரனும் புத்தரும் :மஹேஷ் முணசிங்ஹ

முதியோர்
காயமுற்றோர் மற்றும் நோயாளிகள்
குழந்தைகள் - வயதுவந்தோர்
பிணக்குவியல்களை
நிறைய நிறையக் கண்ணுற்றேன்
பாவங்களை ஊக்குவிக்கும்
துறவிகளின் உருவங்களைக் கண்டேன்
*பிரித் நூலும் கட்டப்பட்டது
'நாட்டைக் காக்கும்' எனக்குக் காவல் கிட்டவென
பிரார்த்தித்த தகவல்களும் கிடைத்தன தாயிடமிருந்து
விழி சதை இரத்தமென தானம் செய்து
உங்களிடம் வந்துள்ளேன்
ஆனாலும் புத்தரே
உங்களது பார்வை மகிமை மிக்கது
கிராமவாசிகளுக்கு மறந்துபோயிருக்கும்
மனைவி குழந்தைகளோடு
நலம் வேண்டிப் பாடும்
சுகப் பிரார்த்தனைப் பாடலிடையே
எனது தலையை ஊடுருவும்
உங்களது பழக்கமில்லாத புத்தர் விழிகள்
கண்ணெதிரே தோன்றுகின்றனர்
என்னால் கொல்லப்பட்ட மனிதர்கள்
ஆங்காங்கே வீழ்ந்துகிடந்த
அவர்கள் மெலிந்தவர்கள்
துயருற்ற ஏழைகள்
ஒரே நிறம்
ஒரே உருவம்
எல்லோருக்குமே
எனது முகம்
நூறு ஆயிரமென
நான் கொன்றொழித்திருப்பது
என்னையேதானா
பாளிச் செய்யுள்களை இசைக்கின்ற
சிறிய பிக்குகள்
பின்னாலிருந்து
நீங்கள் தரும் புன்முறுவல்
தென்படாதிருக்க இரு விழிகளையும் மூடிக்கொள்கிறேன்
கரங்கள் தென்பட்டு விடுமோ என்ற அச்சத்தில்
வணங்குவதற்குக் கூட உயர்த்தாமலிருக்கிறேன்
பிரித் நூல் - பாதுகாவல் தேடி, புத்தரை வணங்கி, உடலில் கட்டப்படும் நேர்ச்சை நூல்.



மூலம் - மஹேஷ் முணசிங்ஹ (சிங்கள மொழியில்)
தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப்,

வஸ்ர்து

தலைப்பு புரிபடாமல் குழம்ப வேண்டாம். வாஸ்து என்கிற வார்த்தை தான் அது!



அந்த வார்த்தைக்கு இன்னும் மதிப்பு ஏற வேண்டுமானால் முதல் எழுத்து குறிலாக இருக்கவேண்டும் என்கிறபடியால் அந்த 'காலை' [சன்னல்] எடுத்து அடுத்த எழுத்துக்குப் பக்கத்தில் போட்டு விட்டோம். ஒற்றைப்படை இலக்கத்தில் எழுத்துகள் இருப்பதை விடவும் இரட்டைப்படை இலக்கத்தில் இருந்தால் நல்லது என்கிற அடிப்படையில் 'த்' என்கிற ஒரு எழுத்தை இணைத்து விட்டோம். அவ்வளவே!



வாஸ்து சாஸ்திரத்தை போதிப்பவர்களையும் அதை கடைபிடிப்பவர்களையும் நையாண்டி செய்யும் நோக்கம் இந்தக் கட்டுரைக்கு இல்லை. இதை சாக்காக வைத்து காசு அள்ளுபவர்களுக்கும் வீணாய் தங்களைத் தாங்களே குழப்பிக் கொண்டு இதைப் பரீட்சித்துப் பார்ப்பவர்களுக்கும், தங்கள் பெயர்களில் க்,ச்,ட்,த் என்று சேர்த்துக் கொண்டு புகழ் தேடப் பார்க்கும் புள்ளி ராஜாக்களுக்கும் தான்!



ஜாதகத்தை கையில் வைத்துக் கொண்டு ஏழாம் வீடு, எட்டாம் வீடு, ஒன்பதாம் வீடு, குரு, சனி, சுக்ரன், அவன் இவனைப் பார்க்கிறான், இவன் அவனைப் பார்க்காமல் இருக்கிறான், அதனால் தான் உனக்கு வேலை கிடைக்கவில்லை, ஆனால் சீக்கிரம் கல்யாணம் ஆகும் என்றெல்லாம் குழப்பப் படுத்தப் பட்டுக் கொண்டிருந்த மகா ஜனங்கள் இப்போது காலத்துக்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொண்டு வாஸ்து சாஸ்திரத்தைத் தங்கள் இதயத்தில் ஏற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஜாதகத்தில் தோஷம் இருந்தால் ஒரு ஆலமரத்தை சுற்றியோ, கோவிலில் விளக்கேற்றியோ, புற்றுக்குப் பால் வார்த்தோ 'இனி நல்லது நடக்கும்' என்று மனதுக்குள் சமாதானப்பட்டுக் கொண்டவர்கள், வீட்டில் இருக்கிற வாசலை மூடிவிட்டு, இன்னொரு பக்கம் புதிய வாசலை உருவாக்குகிறார்கள். கிழக்கை வடக்கு பண்ணுகிறார்கள், வடக்கை தெற்கு பண்ணுகிறார்கள், போகிற போக்கில் மேல் மாடிக்கு செல்ல படிகளே இருக்கக் கூடாது என்கிற விதத்தில் இது போய் முடிய வாய்ப்புகள் இருக்கின்றன.



வாழ்க்கை எப்போதும் ஒரே மாதிரி இருக்காது. மேடுகளும் பள்ளங்களும் நிறைந்த கரடு முரடான பாதை தான் அது. எப்போதும் இன்பம் இருந்தால் திகட்டிப் போகும் என்பதால் துன்பங்களும் சேர்ந்து அனுபவித்துத் தான் ஆக வேண்டும். இது தெரிந்த விஷயம் தானே? மேடு இருக்கும் போது மீசை முறுக்கிக் கொண்டு உட்கார்ந்திருந்து விட்டு, பள்ளம் வரும் போது தடுமாறிப் போகிறார்கள். இன்பம் வந்த சமயம் 'துன்ப வேளையில் இப்படி நடந்து கொள்ள வேண்டும்' என்று முன்னேற்பாடாக திட்டங்கள் தீட்டி எந்நாளும் பொன்னாளாய் களியாட்டம் போடுவதை விடுத்து, இன்பத்தில் கண்கள் மூடி அனுபவித்து துன்பத்தில் கண்களையே மூட முடியாமல் உழல்கிறார்கள்.



துன்பம் வரும்போது தான் எல்லோருக்கும் இறைவன் இருக்கும் உண்மையே தெரிய வருகிறது. கோவில் வாசலில் ஒரு அவசர என்.சி.சி. ஸ்டைல் சல்யூட் அடித்து சென்று கொண்டிருக்கிறவர்கள், கோவில் உள்ளே போய் சரியாக எண்ணிப் பார்த்து ஒன்பது தடவை சுற்றுகிறார்கள். எட்டு தடவை அல்லது பத்து தடவை என்றால் கிரகங்கள் ஏமாற்றி விடுகிற சாத்தியங்கள் இருக்கின்றன என்று சரியாக 'எண்ணி' கர்மம் 'துணிகிறார்கள்'!



பத்து வருடங்களாக ஒரே வீட்டில் இருக்கிறீர்கள். திடீரென்று ஒரு நாள் வாஸ்து சரியில்லை என்று காரணம் காட்டி வீட்டில் திருத்தங்கள் செய்கிறீர்கள். கிட்டத்தட்ட பத்து வருடங்கள் காலம் அதே வீட்டில் நீங்கள் வசித்த போது உங்களுக்குக் கிடைக்கப் பெற்ற அருமையான பலன்களை ஒரு சில நிமிடங்களில் மறந்து விடுவது ஏன்? 'வருகிற பணம் எல்லாம் எங்கு போகிறது என்று தெரியாமல் போய்விடும். செலவு கையைக் கடிக்கும். அதற்குக் காரணம் வீட்டில் உள்ள ஒரு அறை' என்று சொல்லப் படும் போது, அதற்காக செலவு செய்யத் தயாராக இருக்கிறீர்கள். இருக்கிற செலவோடு இதுவும் சேர்ந்து அதிக செலவு என்று மனதிற்குத் தோன்றுவது கிடையாது. வருகிற பணம் எல்லாம் போய்விடுகிறது என்பதற்கு முதல் முக்கிய காரணம் சரியாகத் திட்டமிடவில்லை என்பது தானே? அப்படி ஏதாவது திருத்தம் செய்தால் தான் இந்த நிலை மாறும் என்றால் அதை செய்ய வேண்டியது வீட்டின் மேல் மாடியில் அல்ல, உங்கள் மேல் மாடியில் தான், அதாவது உங்கள் மூளையில்! வீட்டின் மூலைகளுக்கும் அதற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை.



"நீங்கள் பிறந்த நட்சத்திரத்திற்கு உங்கள் பெயர் 'வ' அல்லது 'வா' அல்லது 'வி' என்கிற எழுத்தில் ஆரம்பிக்க வேண்டும்" என்று 'பாட்டுக்குப் பாட்டு' நிகழ்ச்சியில் எழுத்து கொடுப்பது போல் சொல்வார்கள். 'பெயரை மாற்றுங்கள், அப்புறம் பாருங்கள், உங்கள் புகழ் ஓகோவென உயர்ந்து போகும்' என்பார்கள். நீங்கள் பிறந்து ஒரு இருபது இருபத்தைந்து வருடங்கள் ஒரு பெயருடன் வாழ்ந்த பிறகு, திடீரென்று ஒரு நாள் இந்த மாற்றம் தேவை தானா? பெயர் மாற்றத்தை விடவும் பெயருக்குள்ளேயே செய்யும் மாற்றங்கள்- ஆகா, பெயரில் இருக்கும் எழுத்துகளின் கூட்டுத் தொகையை அதிகமாக்க எழுத்துகளை அதிகமாக்குவார்கள். இதில் வேறு ஒவ்வொரு எழுத்துக்கும் ஒரு எண் கொடுத்து அதைக் கூட்டும் போது உங்கள் பிறந்த தேதிக்குத் தோதாக அது இருக்கிறதா என்று பார்க்க சொல்வார்கள்.



எழுத்தாளர்கள் வைத்துக் கொள்ளும் புனைப் பெயர் போல் ஒவ்வொருவருடைய இயற்பெயரும் மாற்றங்களுக்கு உள்ளாகிறது. சில சமயம் நான் நினைப்பதுண்டு - இந்த புனைப் பெயர் என்கிற வார்த்தையில் முதல் எழுத்தை மாற்றி, 'பூனைப் பெயர்' என்று மாற்றினால் அந்த வார்த்தைக்கு இன்னும் மவுஸ் [எலி அல்ல!] அதிகரிக்குமோ என்று!



இந்திய வாஸ்து செய்து அலுத்து விட்டது என்று இப்போது சீனா, ஜப்பான் என்று மேலை நாட்டுப் பழக்க வழக்கங்களை இறக்குமதியும் செய்ய ஆரம்பித்து விட்டோம்.



ஏதோ வாயில் நுழையாத ஒரு பெயரை சொல்லிவிட்டு அதன்படி மீன் தொட்டியை வீட்டில் ஒரு மூலையில் வைத்தால் வீட்டில் உள்ள தீய சக்திகள் ஓடிப் போகும் என்று ஒருவர் குறிப்பிட்டார். வீட்டில் உள்ள தீயசக்தி என்பதைத் தன் மாமியாருக்கு உருவகப் படுத்திக் கொண்டாரோ என்னவோ, அந்த்ப் பெண்மணி உடனே மீன் தொட்டி வாங்கும் காரியத்தில் இறங்கிவிட்டார். ஏற்கனவே துண்டு விழும் பட்ஜெட்டில் இன்னும் ஒரு பத்து பதினைந்து துண்டுகள் விழ வைத்து மீன் தொட்டி வாங்கிவிடத் திட்டம் போட்டார்.



மேல்மாடியில் படிக்கட்டுகள் முடிகிற இடத்தில் இடப் பக்கம் இது வைக்கப் பட வேண்டும் என்று இடம் குறிக்கப் பட்டது. "வரவேற்பறையில் வைக்கலாமே?" என்று அவர் சந்தேகம் கேட்க, நம் வெளிநாட்டு வாஸ்து வல்லுநர் மறுத்து விட்டார். "அது தான் சரியான இடம். உங்கள் மனதிற்கு இடையூறு கொடுத்துக் கொண்டிருந்த எல்லா கவலைகளும் பறந்தோடி விடும். தீய சக்திகள் எல்லாம் படிக்கட்டுகளில் இறங்கி வீட்டை விட்டு மறைந்து விடும்" என்றெல்லாம் சொல்லப் போக, ஒரு குறிப்பிட்ட நாளின் மாலை நேரம் மீன் தொட்டி வீட்டில் வந்து இறங்கியது. மன்னிக்கவும், மேல் ஏறியது.



"ஆகா, என்ன அழகாக இருக்கிறது! இதில் தண்ணீர் ஊற்றி மீன்களையும் விட்டு விட்டால் இன்னும்அழகு கூடிப் போகும்!" என்று திருஷ்டி கழித்தார்.



தண்ணீர் ஊற்ற ஆரம்பித்தார்கள். அதற்கு நேரம் எல்லாம் பார்த்து ஸ்பெஷல் பூஜை எல்லாம் செய்தார்கள். பார்ப்பதற்கு ஒரு சின்ன தொட்டி போல் தெரிந்த அதில் இவ்வளவு தண்ணீர் ஊற்ற முடியுமா என்று வியக்க ஆரம்பித்தது குடும்பம். கிட்டத்தட்ட எழுபத்தைந்து லிட்டர் தண்ணீர் ஊற்றப் பட்டதும், தொட்டி நிரம்பிப் போனது.



தீய சக்திகள் இன்றைக்கே போய்விடுமா? அல்லது மீன்கள் தொட்டிக்குள் வந்த பிறகு தான் போகுமா என்று புதிய குழப்பத்துடன் எல்லோரும் தூங்கப் போனார்கள்.



இரவு இரண்டு மணி இருக்கும். டம்மென்று ஒரு பெரும் சத்தம். சலசலவென்று குற்றால அருவிநீர் மேலிருந்து கீழ் விழுவது போல் ஒலி! குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவராக எழுந்து வந்து அந்த கோலாகலக் காட்சியைக் கண்டார்கள்.



மீன் தொட்டி விரிசல் கண்டு அதில் இருந்த தண்ணீர் எல்லாம் அதிபயங்கர வேகத்தில் படிகளில் இறங்கிக் கொண்டிருக்க, வாயடைத்துப் போய் நின்றிருந்தனர்!



விஷயத்தைக் கேள்விப்பட்டு அடுத்த நாள் நாங்கள் அவர்கள் வீட்டுக்கு சென்றிருந்தோம். எல்லோரும் கண்களின் கீழே புதிதாகக் கரு வளையங்கள் மாட்டியிருந்தார்கள்!



"எழுபது லிட்டர் தண்ணீர் இல்லையா? எல்லாம் சுத்தம் செய்து முடிக்க காலை ஏழு மணி ஆகி விட்டது! தூக்கமே இல்லை!" என்று வருத்தப் பட்டுக் கொண்டார் அந்தப் பெண்மணி.



"சும்மாவா? தீய சக்திகள் வெளியேறும் போது இது மாதிரி எல்லாம் ஏதாவது செய்து விட்டுத்தான் வெளியேறும். நான் ஆங்கிலப் படங்களில் பார்த்திருக்கிறேன்!" என்று சமயம் தெரியாமல் நான் சொல்ல, என்னையே ஒரு தீயசக்தி போலப் பார்த்தார் அந்தப் பெண்மணி!
நன்றி: http://tamil.sify.com/

வாந்தி எடுப்பவனை ஊக்குவிக்கும் விதமாகத் தேர்வு முறைகள்

சுதந்திரம் என்ன சுக்கா? மிளகா? என்றெல்லாம் கவிதை எழுதிவிட்டார்கள். சுக்கும் இல்லை, மிளகும் இல்லை என்பதை மெதுவாகச் சொன்னால் கூட தேசியவாதிகள் பிழிந்து எடுத்துவிடுவார்கள். ஆனால் இந்த வெங்காய பஜ்ஜி அல்லது சுதந்திரத்தைப் பற்றிக் கொஞ்சமாவது பேசத் தோன்றுகிறது.

நாம் கொண்டாடும் சுதந்திர தினம் வெள்ளையர்கள் வெளியேறிய நினைவு நாள் என்பதனைத் தவிர்த்து, சுதந்திரம் என்பதற்கான எந்தவிதமான பொருளும் அதற்கு இல்லை. சுதந்திரம் என்ற பெயரில் வெள்ளையர்களை வெளியேற்றிவிட்டு மக்களையும் அவர்களின் உழைப்பினையும் சுரண்டிக் கொள்ளும் உரிமையை உள்நாட்டு அரசியல்வாதிகளுக்கும் அதிகார வர்க்கத்திற்கும் கொடுத்திருக்கிறோம்.

வெள்ளையன் வாழ்ந்தபோது அவனை எதிர்த்துப் பேசியவர்களை சிறைகளில் அடைத்தார்கள், கல் உடைக்கச் செய்தார்கள், செக்கிழுக்க வைத்தார்கள் என்று பாடப்புத்தகங்களில் படித்ததுண்டு. இன்றைய சுதந்திர தேசத்தில் அதிகார வர்க்கத்தை எதிர்த்துப் பேசுபவர்கள் மீது வெள்ளையன் காலத்தில் பாய்ந்ததை விடக் கொடூரமாக சட்டம் பாய்கிறது . அதோடு சேர்ந்து ரவுடிகளும் பாய்கிறார்கள்.

இந்த அடக்குமுறை ஆங்கிலேயர்கள் காலத்திலிருந்து இன்று வரையிலும் வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு வடிவங்களில் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. ஆங்கிலேயர்களின் ஆட்சிக்காலத்திற்கும் சுதந்திர ஆட்சி முறைக்கும் அடக்குமுறை மட்டுமே ஒற்றுமையில்லை. ஆனால் இந்த அடக்குமுறைதான் சுதந்திரம் என்ற சொல்லின் பொருளுக்கு எந்தவித அர்த்தமும் இல்லாமல் செய்வது.

சுதந்திரம் பெற்றதன் மிகப் பெரிய வெற்றியே பரந்த அளவிலான முதலாளித்துவ சமூகத்தையும் மொன்னையான நடுத்தர வர்க்கத்தையும் நாடு முழுவதுமாக பரவச் செய்ததுதான். ஆரம்ப காலங்களில் அமைச்சர்களும் இன்னபிற அதிகாரிகளும் உள்நாட்டு முதலாளிகளுக்கு தரகர்களாகச் செயல்பட்டு அவர்களின் தொழிலும் வியாபாரமும் எந்தவிதத்திலும் பாதிக்கப்படாமல் கம்பளம் விரித்தார்கள். அதற்குப் பிரதிபலனாக கமிஷன் பெற்றுக் கொண்டிருந்தார்கள். தொண்ணூறுகளில் உலக மயமாக்கல் மற்றும் தாராளமயமாக்கல் என்ற பெயரில் உள்நாட்டு முதலாளிகளுக்கு அளிக்கப்பட்ட வரவேற்பை விட பன்மடங்கு வரவேற்பு வெளிநாட்டு முதலாளிகளுக்கு வழங்கப்பட்டது. இந்தக் கட்டம் வரைக்கும் தரகர்களாகச் செயல்பட்டு வந்த அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் அவர்தம் குடும்பங்களும், துணிந்து தாங்களும் 'சுதந்திர நாட்டில்' தொழில் தொடங்கினார்கள். இப்பொழுது ஜனநாயகம் பட்டொளி வீசிப் பறக்க சுதந்திர தேசம் என்ற பெயரில் ஒரு முழுமையான முதலாளித்துவ அல்லது நியோ காலனிய நாட்டில் வசித்து வருகிறோம்.

நடுத்தர வர்க்கத்திற்கு ஒரு வித்தியாசமான குணம் உண்டு. சமூகத்தில், அரசியலில் அல்லது தன்னைச் சுற்றி நிகழும் எந்த எதிர்மறையான விஷயங்களைப் பார்த்தாலும் இந்த நடுத்தரச் சமூகம் கோபம் கொள்ளும். ஆனால் அதே சமயத்தில் அந்தக் கோபத்தை அடுத்தவனுக்குக் கூடத் தெரியாமல் மறைத்துக் கொள்ளும். எதிலும் துணிந்து கருத்துச் சொல்லவோ, அப்படியே கருத்துச் சொல்லிவிட்டாலும் சொன்ன கருத்திலிருந்து பின்வாங்காமல் சாலையில் இறங்கிப் போராடவோ தைரியமில்லாத ஒரு சமூகம் அது. இந்த மொன்னையான சமூகத்தை 'சுதந்திர' தேசம் முழுவதும் பரவச் செய்ததில் சுதந்திர நாட்டின் அரசாங்கங்களுக்கும் முதலாளிகளுக்கும் பெரும் பங்கு இருக்கிறது.

இந்த மொன்னைச் சமூகத்தை உருவாக்குவது மிக எளிது. சிறுவயதிலிருந்தே எந்தவிதமான சமூகப் பிரக்ஞையும் இல்லாத, தான் வாழும் ஊர் பற்றியோ அல்லது பகுதி பற்றியோ எந்த அறிவினையும் தராத தட்டையான பாடங்களைக் கற்கச் செய்ய வேண்டும். உண்மையான வரலாறுகள் மறைக்கப்பட்டு போலித்தலைவர்களும், விளம்பரதாரிகளும் தலைவர்களாகவும் தியாகிகளாகவும் சித்தரிக்கப்பட்ட பாட முறை அமைய வேண்டும். அதற்கு ஆளும் வர்க்கத்துக்கு ஜால்ரா அடிக்கும் கல்வியாளர்களைப் பாடத்திட்டக் குழுவில் நியமனம் செய்யவேண்டும். தன் முன்னோர்களின் வாழ்வியல், தனித்துவமான விவசாய முறைகள் போன்றவற்றைப் பற்றி எந்த அறிவும் இல்லாத ஒரு சமூகம் உருவாக்கப்பட்டால் அந்தச் சமூகம் ஆளும் வர்க்கத்திடம் கேட்பதற்கென எந்தக் கேள்வியும் இருக்காது.

கற்கும்போது பாடங்களைப் புரிந்துக் கொண்டு படிப்பவனை விடவும் மொத்தமாக மனப்பாடம் செய்து தேர்வில் வாந்தி எடுப்பவனை ஊக்குவிக்கும் விதமாகத் தேர்வு முறைகள் அமையவேண்டும். இவ்வாறு படிக்கும்போது மாணவர்களின் சிந்திக்கும் திறனை, பெருமளவில் மழுங்கடிக்கச் செய்யமுடியும். இப்படி உருவாகும் மழுங்கல் தன்மையுடையவர்களுக்கு ஓரளவுக்கு சம்பளத்துடன் வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகளை முதலாளிகளுடன் சேர்ந்து உருவாக்கித் தந்துவிட வேண்டும். அவ்வளவுதான், அரசாங்கத்தின் பணி. வாங்கும் சம்பளத்தில் ஒரு இடம் வாங்கி வீடு கட்டி, குழந்தைகளைப் படிக்க வைத்து, அவர்களுக்குத் திருமணம் செய்து வைத்து என்று அவன் தன் கடமைகளில் மூழ்கி உருண்டு கொண்டிருப்பான். காலப்போக்கில் இவ்வாறாக எதைப் பற்றியும் கண்டுகொள்ளாத அல்லது கண்டுகொள்ளும் பட்சத்தில் அமைதியாக இருக்கும் ஒரு சமூகத்தை உருவாக்கிவிட முடியும். இதைத்தான் இந்த அரசாங்கங்கள் அறுபதாண்டுகளில் வெற்றிகரமாகச் செய்திருக்கின்றன.

Friday, August 13, 2010

நண்பர்களின் பிறந்த நாளை சுலபமாக் கண்டுபிடி

உங்க நண்பர்களின் பிறந்த நாளை சுலபமாக் கண்டுபிடிக்கிற கணக்கு!

முதல்ல உங்க நண்பரை

1. அவருடைய பிறந்த நாளின் மாதத்தை 4 ஆல் பெருக்கச் சொல்லுங்க

2.விடையுடன் 13 ஐக் கூட்டச் சொல்லுங்க.

3.அதை 25 ஆல் பெருக்கச் சொல்லவும்.

4.வரும் விடையிலிருந்து 200 கழிக்கவும்.

5.அத்துடன் பிறந்த தேதியின் எண்ணைக் கூட்டச் சொல்லவும்.

6.அதை 2ஆல் பெருக்கி

7.அதிலிருந்து 40 ஐக் கழிக்கவும்.

8.மறுபடியும் 50 ஆல் பெருக்கி

9.அத்துடன் அவர் பிறந்த வருஷத்தின் கடைசி 2 எண்களைக் கூட்டச் சொல்லவும்.

10.ஹாஹா இனிதான் உங்க மேஜிக் ஆரம்பம்...இதுவரை அவர் கூட்டிக் கழித்து பெருக்கி முடித்த தொகையை மட்டும் சொல்லச் சொல்லவும்.

அதை வைத்து ஒரு சின்ன மேஜிக் செய்தால் அவ்ர் பிறந்த மாதம்,தேதி,வருஷம் எல்லாம் சுலபமாகச் சொல்லி விடலாம்.

அந்த மேஜிக் செய்யவும் ஒரு நெம்பர் தேவை அது என்னன்னு அடுத்த பதிவில் சொல்றேன்.

டிஸ்கி:சும்மா டெஸ்டுக்காக குட்டீஸ்களோ அல்லலது அவர்களின் அண்ணாக்களோ 9வது படியில் வந்த தொகையை மட்டும் சொல்லுங்க .அவங்க பிறந்த நாள் சொல்றேன்.

டிஸ்கி 2:இவ்வளவு கணக்கு போடுவதற்கு பதில் நானே பிறந்த நாள் சொல்லிடுறேன் என்று நண்பர் சொன்னால் அவர் கணக்கில் மந்தம் னு அர்த்தம் ஹாஹாஹா..
அன்புக் குழந்தைகளே

பெரிய பிள்ளைகளுக்கு வாய்ப்பாடு நன்கு தெரிந்திருக்கும்.
சின்னப் பிள்ளைகளுக்கு பெருக்கல் வாய்ப்பாடு கொஞ்சம் சிரமம் தானே?

இதோ ஒரு எளிய ஒன்பதாம் வாய்ப்பாடு!!!.நோட்டுப் புத்தகம் பேனா உதவி இல்லாமல் கையாலேயே மிகச் சுலபமாய் ஒரு 9 ஆம் பெருக்கல் வாய்ப்பாடு!!!!.
[அதுக்கு மட்டும் தான் சாத்தியம் பிள்ளைகளே!!!

செய்ய வேண்டியது:

1.உங்கள் இரு கைகளையும் உள்ளங்கை தெரியுமாறு விரித்துக் கொள்ளுங்கள்.

2.இடது கை விரலில் இருந்துதான் 1 முதல் 10 வரை எண்ணத் தொடங்க வேண்டும்.

3.எந்த எண்ணை ஒன்பதால் [9 ஆல்] பெருக்க நினைக்கிறீர்களோ அந்த எண்ணுள்ள விரலை மடக்கிக் கொள்ளவும்.

4.பின்பு இடது பக்கத்தில் மீதமுள்ள கை விரல்களையும் வலது பக்கத்து மீதமுள்ள விரல்களையும் சேர்த்தால் அதுதான் அந்தக் கணக்கின் விடை.

என்ன குழம்புகிறதா?

உதாரணமாக 9x4=36





உங்கள் இடது கையில் 4வது விரலை மடக்கியிருப்பீர்கள்.[ஏனெனில் 4 ஆல் பெருக்க]
4 வதுக்கு முன் மீதமுள்ளவை =3 விரல்கள்.
4 வதுக்குப் பின் உள்ளவை 6[இடதில்1+வலதில்5]

3...6..=36 தான் விடை

இன்னொரு கணக்கு 9x7=63

என்ன பிள்ளைகளா மிகச் சுலபமாய்த் தோன்றுகிறதா? இனி ஒன்பதாம் வாய்ப்பாடுன்னா பயமில்லைதானே?

மனுஷ்ய புத்திரன் கவிதைகள்-2

ஒரு காதலை தெரிவிக்கும்போது

ஒரு சிறு பெண்
தயங்கித் தயங்கி

தன் காதலை தெரிவிக்கிறாள்




அது அவள் முதல் காதலாக இருக்கவேண்டும்

அல்லது ஒவ்வொரு காதலையும்

தெரிவிக்கும்போதும்

அவள் அவ்வளவு

குழப்பமடைபவளாக இருக்க வேண்டும்




உண்மையிலேயே அது

புத்தம் புதியதாக இருந்தது

அப்போதுதான் உறையிலிருந்து

பிரிக்கபட்ட ஆடையின் வாசனையை

அ து நினைவூட்டுகிறது




அவளுக்கு ஒரு காதலை

எப்படித் தெரிவிக்கவேண்டும்

என்பதுகூட தெரிந்திருக்கவில்லை


அப்போது அவள் வீட்டைப் பற்றி பேசினாள்

அம்மாவைப்பற்றி பேசினாள்

பக்கத்துவீட்டு குழந்தைகளைப் பற்றி பேசினாள்

ஒரு அபத்தமான கனவைப் பற்றி பேசினாள்




அவள் விரும்பியதற்கு

நேர் எதிரானதையே

அவள் பேசினாள்



அது தவறாகவே புரிந்துகொள்ளப்படும்என்று

அவள் அஞ்சினாள்

ஆனால் அது சரியாகப் புரிந்துகொள்ளப்பட்டபோது

மிகவும் வியப்படைகிறாள்




தற்செயலாக திறந்துவிட்ட

ஒரு அறையின் எதிர்பாராத காட்சியில்

அவள் அப்படியே நின்றுகொண்டிருக்கிறாள்




அதைச் சொல்லும்போது அவளுக்கு

அவள் ஒத்திகை பார்த்த எதுவுமே

நினைவுக்கு வரவில்லை




அதை ஒரு உணர்ச்சிகரமானநாடகமாக

கையாளவே அவள் விரும்பினாள்

ஆனால் ஒரு நகைச்சுவைக் காட்சியைப்போல

அதைக் கையாண்டாள்




ஒரு காதலைத் தெரிவிப்பது

இன்னொரு மனிதனை முழுமையாக

சந்திப்பது என்பது அவளுக்குத் தெரியாது

அவள் அதை முதலில்

ஒரு சுவாரசியமான விளையாட்டாகவே தொடங்கினாள்

ஆனால் அந்தச் சந்திப்புநீணடதாக இருந்தது





ஒருவரை முழுமையா சந்திப்பது

அவ்வளவு பாரமானது என்று

அவள் யோசித்ததே இல்லை



அவள் திரும்பிப்போக விரும்பினாள்

அவளுக்கு அவளாக மட்டும் கொஞ்சம்

மூச்சுவிட வேண்டும்போல இருந்தது

ஆனால் அந்த சந்திப்புமுடிவடைவதாகவே இல்லை




அவள்

எல்லாவற்றையும்முழுமையாக

நம்பவிரும்பினாள்

எல்லாவற்றையும் முழுமையாக

சந்தேகிக்க விரும்பினாள்

தனக்கு யோசிக்க

வேறு விஷயஙகளே இல்லையாஎன்று

அவளுக்கு எரிச்சலாக இருந்தது

ஆனால் அவள் அதையே யோசித்தாள்




ஒரு சிறுபெண்

தனது காதலை தெரிவிக்கும்போது

அவ்வளவு நிராயுதபாணியாய் இருக்கிறாள்




இந்த உலகத்தின் மீது வைக்கும்

கடைசி நம்பிகையைப்போல

கருணையின்மைகளுக்கு முன்னே

ஒரு கடைசி பிரார்த்தனையைப் போல



அவ்வளவு பிரகாசமாக இருக்கிறது
அது




மனுஷ்ய புத்திரன்

மனுஷ்ய புத்திரன் கவிதைகள்- 1

கடவுளுடன் பிரார்த்தித்தல்

இன்று நீ
கைவிடப்பட்டிருக்கிறாய்

அல்லது அது
உன்னைப் போன்ற
யாரோ ஒருவராகவும் இருக்கலாம்

இது உனக்கு நிகழ்வது
எத்தனையாவது முறை
என்று நீ எண்ண வேண்டியதில்லை

ஒரு குழந்தையாக
மீண்டும் பிறப்பதுபோல
ஒரு துரோகத்திலிருந்து
அல்லது
ஒரு கைவிடப்படுதலிருந்து
நீ புத்தம் புதியதாய்
உன் பூமிக்குத் திரும்புகிறாய்

நீ கைவிடப்படும்போதுதான்
உன் பிரியத்தின் கனல் எரியத் தொடங்குகிறது
பிரியமற்றுக் குளிர்ந்த ஒவ்வொரு கரத்தையும்
அந்தக் கனல் வெதுவெதுப்பாக்குகிறது

கைவிடப்படும்போது
நீ தனியாக இருப்பதாக உணர்கிறாய்
ஆனால் நாம் தனியர்கள் அல்ல

இந்த உலகம்
கைவிடப்பட்ட பெண்கள்
கைவிடப்பட்ட குழந்தைகள்
கைவிடப்பட்ட முதியவர்கள்
கைவிடப்பட்ட குடிகாரர்கள்
கைவிடப்பட்ட பைத்தியங்கள்
கைவிடப்பட்ட உபயோகமற்றவர்கள்
கைவிடப்பட்ட நோயாளிகள்
கைவிடப்பட்ட உடல் சிதைக்கப்பட்டவர்கள்
கைவிடப்பட்ட தண்டிக்கப்பட்டவர்கள்
கைவிடப்பட்ட காட்டிக்கொடுக்கப்பட்டவர்கள்
கைவிடப்பட்ட கிறிஸ்துகளின்
உலகம்

அரவணைக்கப்பட்டவர்களைக் காட்டிலும்
பிரமாண்டமாக வளர்ந்துவிட்டது
கைவிடப்பட்டவர்களின் சமூகம்
நாம் பயப்பட ஒன்றுமில்லை

கைவிட்டவர்களை
நாம் தண்டிக்கவோ
மன்னிக்கவோ ஒன்றுமே இல்லை

மாறாக கைவிடப்படுதல் துக்கமல்ல
ஓரு நீண்ட கனவு தரும் களைப்பு

ஒரு பழக்கத்தை விட்டுவிடும் சமன்குலைவு


இன்று உன்னை
ஒருவர் கைவிடும்போது
கடவுள் உனக்காகப் பிரார்த்தனை செய்கிறார்

கைவிடப்பட்ட எல்லோருக்காகவும்
அவர் முடிவில்லாத பிரார்த்தனைகளைச் செய்துகொண்டிருக்கிறார்

நீ கைவிடப்படும்போது மட்டுமே
கடவுளோடு சேர்ந்து பிரார்த்திக்கும்
மகத்தான வேளை
உனக்குக் கிடைக்கிறது

10.02.06

நன்றி: கடவுளுடன் பிரார்த்தித்தல்

தமிழ் சினிமாவில் கலை: வணிகப் படங்கள் - கலைப் படங்கள்

நீங்கள் விளம்பரப் படங்களை ரசித்துப் பார்ப்பதுண்டா?

பெரும்பாலானோரின் பதில் ‘ஆம்’ என்பதாகவே இருக்கும் என்று நினைக்கிறேன். என்னளவில், பல வருடங்களுக்கு முன் வந்த, காதலன் கிரிக்கெட் மட்டை பிடித்து சதம் அடிக்க, கட்டுப்பாடுகளை மீறி காதலி நடு மைதானத்தில் நடனமிடும் காட்பரி டைரி மில்க் விளம்பரமும், எங்கு சென்றாலும் தொடரும் ஹட்ச் நாய்க்குட்டியும், ப்பபரப்பப் பாபபா என்று இசைக்கும் ந்நெஸ்கேஃபே… விளம்பரமும், ஏ.ஆர்.ரகுமான் தோன்றும் ஏர்டெல் இசையும், கொண்டாட்டமாக நினைவில் நிற்பவை. சமீபத்தில் நைக் நிறுவனத்திற்காக செய்யப்பட்ட சில வேடிக்கையான விளம்பரங்கள் நடைபாதை கடையொன்றில் குறுந்தகடுகளாகக் கிடைக்க, பேரம் பேசாமல் வாங்கி வந்து போட்டுப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தேன்.



அதே சமயம், எத்தனை தான் அற்புதமான விளம்பரம் என்றாலும் அவற்றைக் கலை அளவீடுகளோடு குழப்பிக் கொள்வதென்பது எனக்கு ஒருபோதும் நேர்ந்ததில்லை.

விளம்பரத்துறையின் பெரும் நிபுணர்களுள் ஒருவராக எந்த தேசத்தவராலும் மதிக்கப் படும் டேவிட் ஆகில்வி, தன் புத்தகத்தில் "வாடிக்கையாளன் விளம்பரம் எவ்வளவு புத்திசாலித்தனமாக இருக்கிறது என்று வியந்தோதுவதை விட அந்த விளம்பரத்தின் மூலம் அவன் அந்தப் பொருளை வாங்கினானா என்பதே முக்கியமானது, அதற்கேற்ப விளம்பரம் பின் நகர்ந்து கொண்டு விற்பனைப் பொருளை முன் நிறுத்துவதே அவசியம்" என்கிறார். காரணம், விளம்பரங்கள் முழுக்க முழுக்க வணிக நோக்குடன் சமைக்கப் படுபவை. விற்பனைதாரரை, வாங்குவோருடன் தொடர்புபடுத்துவதே அவற்றின் பணி; எவ்வளவு தான் ரசிக்கக் கூடியதாக இருந்தாலும் வணிகத்துக்கு மேலான நோக்கு அவற்றில் இருக்க வழியில்லை. ஆகவே, விளம்பரப் படங்களை வணிகப் படங்கள் என்று குறிப்பதே பொருத்தமானது. அதனாலேயே தொலைக்காட்சியில் தோன்றும் விளம்பர இடைவேளையை ‘கமர்ஷியல்’ ப்ரேக் என்ற சொல்லால் சுட்டுகிறோம்.

விசித்திரம் என்னவென்றால், விளம்பரங்களுக்குப் பயன்படுத்த வேண்டிய சொல்லை பலர் சினிமாவுக்குப் பயன்படுத்த, கேட்க நேரிடுகிறது. நண்பர்களுடனான பல உரையாடல்களில் கவனித்திருக்கிறேன், ‘கமர்ஷியல் படம் தான் ஆனா நல்லா இருந்துச்சு’, ‘ஒரு நல்ல கமர்ஷியல் படம் எடுக்கணும்பா’, ‘அவர் ஒரு கமர்ஷியல் டைரக்டர்’, வணிகப் படம் என்றாலும் கலையின் கூறுகள் அங்கங்கே தென்படுகின்றன – இப்படி, பல்வேறு சேர்க்கையில் ‘கமர்ஷியல்’ என்ற வார்த்தை சினிமாவுடன் இணைத்துப் பயன்படுத்தப்படுவதை எதிர்கொள்ள நேரிடுகிறது.



முதலில், பிரபலமடைந்து பண வசூலை அள்ளிக் குவித்த படங்களை வணிகப் படங்கள் என்று குறிக்கப்படுகிறது என்று மேலோட்டமாகப் புரிதல் கொண்டிருந்தேன். போகப் போக ஆழ்ந்து கவனித்ததில் இந்த வார்த்தை ஏற்படுத்தும் பிரிவினையால் வணிகப் படங்கள், கலைப் படங்கள் என்று இரு வேறு வகையாக சினிமா தமிழில் பிளவுண்டு அதற்குத் தகுந்தபடியான சூத்திரங்கள் உருவாக்கம் கொள்வதை அறிய முடிகிறது. ‘மிகவும் பிடித்த சினிமா’, ‘குறைவாகப் பிடித்த சினிமா’, ‘பிடிக்கவே பிடிக்காத சினிமா’ - இப்படி மட்டுமே சினிமாவைப் பிரித்தறிய முடிந்த என் போன்ற எளிமையான பார்வையாளனுக்கு இதுபோன்ற பகுப்புகள் ஆச்சரியமும் திகிலும் ஊட்டுவதாகவே இருக்கின்றன; சினிமாவை வேறெதுவோவாக ஆக்கும் குழப்பத்தை தருவிக்கின்றன.

சினிமா என்பது முழுக்க முழுக்க கலை சார்ந்த ஊடகம் – இப்படிச் சொல்வதற்கு முன் கலை என்றால் என்ன என்ற கேள்வியைச் சந்திக்க நேரிடுகிறது.

கலை என்றால் என்ன?

குரங்கிலிருந்து மனிதன் என்கிறது விஞ்ஞானம். குரங்கு மனிதனாகிய பாதையில் இரு உயிரினங்களுக்கிடையே முளைத்த பிரிவினைக்கோடு எது? – மனது என்று அறிகிறோம். மனது என்றால் என்ன? காலம் என்று பதில் கொள்ளலாம். அதாவது உலகைப் பகிர்ந்து கொள்ளும் கோடானு கோடி உயிரினங்களில் ஒரு ஜீவராசி மட்டும் நிகழ்வை இறந்த காலம்-நிகழ் காலம்-எதிர் காலம் என்று மூன்று காலங்களாகப் பிரித்துக் கொள்ளத் துவங்கிய போது ‘மனிதன்’ தோன்றத் துவங்கினான். அதாவது மனது என்ற ஒன்று இருப்பதே மற்ற உயிரனங்களுக்கும் மனிதனுக்குமான வித்தியாசம். வேறு வார்த்தைகளில், நேற்று நடந்ததை இன்றைக்கு இழுத்து வந்து பொருத்திப் பார்த்து நாளை அது எப்படி இருக்கும் என்று யூகம் கொள்ள முயல்வதால் நாம் அனைவரும் மனிதர்கள்.

இதில், மனது என்ற ஒன்று இயக்கம் கொள்ளத் துவங்கிய ஆரம்பப் புள்ளியிலேயே அதன் வெளிப்பாட்டு முறைகளும் அவற்றினை செறிவாக்கிக் கொள்ள வேண்டிய அவசியமும் தோன்றிவிட்டது. விளைவாக சிந்தனை முறைகள் பிறந்தன. தத்துவமும் விஞ்ஞானமும் இருவேறு சிந்தனை முறைகள் ஆயின. சிந்தித்ததை செயல்படுத்த, பரிசீலிக்க, மறுதலிக்க, அதனை அனுபவமாக்கிப் பிறருடன் பகிர்ந்து கொள்ள, அவசியம் ஏற்பட்டது; கலைகள் தோன்றின. தத்துவத்துக்கும் விஞ்ஞானத்துக்கும் இடையே கிடந்து அலைந்த மனது தன் வாழ்வனுபவத்தின் தரிசனப் புள்ளிகளை அனுபவமாக சக மனதுக்குக் கடத்த முயல, அத்தகைய செயல்பாட்டிற்கு அது ஒலிகளைப் பயன் படுத்திய போது இசை பிறந்தது. கோடுகளை, வண்ணங்களைப் பயன்படுத்தியபோது அது ஓவியம் பிறந்தது. திடப்பொருளை வடிவமைப்பாக பயன் படுத்திய போது சிற்பம் பிறந்தது, மொழியைப் பயன்படுத்திய போது இலக்கியம் பிறந்தது, உடல் அசைவுகளை பயன்படுத்திய போது நடனம் பிறந்தது. ஒளியைப் பயன்படுத்தி அதை சேகரிக்கக் கற்ற போது புகைப்படக் கலை பிறந்தது, ஒளி, ஒலி ஆகியவற்றின் இணைப்பாக இவை அனைத்தையும் ஒருங்கினைக்கும் சாதனம் சாத்தியமென்ற நிலையில் சினிமா பிறந்தது.

சுருங்கச் சொன்னால், தான் கொண்ட மனதின் நுண்ணுணர்வு மூலம் பொதுவான மனித உணர்வுகளை ஆராய்ந்து அவற்றில் உயரங்களைத் தீண்டி, புதுப் புது திறப்புகளை உருவாக்கி, அதைப் பிறருக்கு அனுபவமாக மாற்றி விடும் திறன் கொண்டவனை நாம் கலைஞன் என்கிறோம். அத்தகைய திறன் வாய்ந்தவனின் செய்நேர்த்தியால் உருவாகும் படைப்பே கலை என்று அறியப்படுகிறது.



இதில், எல்லா உணர்வுகளையும் எல்லோருடனும் பகிர்ந்துகொள்ள பரிமாறிக் கொள்ள முடியுமா? ஒத்த அலைவரிசை இருந்தால் தானே பரிமாற்றம் சாத்தியம். ஒரு வீட்டின் கூடத்தில் 20 பேருக்கு மத்தியில் நாம் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும் போது நாம் நம் மனதின் ஆழங்களைத் திறந்து பேசி விடுவதில்லை, அனைவருக்கும் பொதுவான ஆர்வங்களையே பேசுகிறோம், பின் நாம் நமக்கு நெருக்கமானவராக கருதும் ஒரிருவருடன் தனிமை கொள்ளும்போதே ஆழமாக பேச முடிகிறது. இந்த இரு முறைகளே கலையிலும் சாத்தியமாகிறது. வெகு மக்களுக்குப் பொதுவாக இருக்கும் அம்சங்களை அவர்களின் ஆர்வத்திற்கேற்ப படைப்பைக் கொடுப்பவன் வெகு மக்களின் கலைஞனாகிப் பிரபலமடைகிறான். அதை தவிர்த்து தன் நுண்ணுணர்வின் முழுவீச்சில் நின்று, தன் அலைவரிசையை உள்வாங்கும் திறனுடனான மனங்களோடு மட்டும் உரையாடும் படைப்புகளை உருவாக்குபவன் பிரபலம் குறைந்த தீவிர கலைஞானகிறான்; ஆழமான அனுபவப் புள்ளிகளை முன்வைக்கும் அவனது கலை, மனித மனதை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லத் தேவையான காரணிகளை கொண்டிருப்பதால் தீவிரக் கலைஞன் முக்கியமான மனிதனாகிறான். உதாரணத்திற்கு, இன்றைய உலக அரங்கில் ஹாலிவுட்டின் ஸ்டீவன் ஸ்பீல்பர்கை வெகு மக்கள் கலைஞன் என்றும், ஈரானின் அபாஸ் கைரோஸ்டமியைத் தீவிரக் கலைஞன் என்றும் கொள்ளலாம். (குறிப்பு: இது உதாரணத்துக்காகச் சொல்லப்படுகிறதே தவிர ஸ்பீல் பர்க் எடுத்த ‘ஷின்ட்லர்ஸ் லிஸ்ட்,‘ ஆர்டிஃபீஷியல் இன்டெலிஜன்ஸ், எக்ஸ்ட்ரா டெரஸ்டிரியல் போன்ற படங்கள் வேறு தளத்தில் வைத்து மதிப்பிடப்பட வேண்டியவை என்ற கவனம் எனக்கு உண்டு என்பதை இங்கே பதிவு செய்து கொள்கிறேன்).

கலையின் பாகுபாடுகள் இப்படியானதாக, பார்வையாளன்- படைப்பாளி இருவரும் ஒருவரை ஒருவர் பரஸ்பரம் தேர்ந்து கொள்ளும் முறை சார்ந்து வீரியத் தன்மையுடன் அமைகிறதே தவிர, இதில் எங்கும் வணிகம் சார்ந்த கலை, வணிகம் சாராத கலை என்ற பிரிவினை இருப்பதாகத் தெரியவில்லை. தவிர, குறிப்பாக சினிமாவில், இரண்டில் எந்த வகைக் கலைஞன் என்றாலும் அவன் ஜீவித்திருக்க பொருளாதாரம் அவசியமானதே. அபாஸ் கைரோஸ்டமி எடுக்கும் படங்கள் உலகின் பல நுண்ணுணர்வு மிக்க மனங்களால் பார்க்கப்பட்டு விவாதிக்கப்படுவதாலே அவரால் தொடர்ந்து தன் படைப்புகளை உருவாக்கி திரையிட முடிகிறது.

தமிழ் சினிமாவில், துரதிர்ஷ்ட வசமாக, அனைவரின் அறிவுக்கும் எட்டும் பொது தன்மைகள் கொண்ட சிறப்பான கலை தோற்றம் கொள்ளாமலே போய் விட்டது; இங்கே ஸ்டீஃபன் ஸ்பீல் பர்க் போன்ற, அல்ஃப்ரட் ஹிட்ச் காக் போன்ற, அனைவருக்கும் சுவாரஸ்யமான ஒரு இயக்குனர் தோன்றவேயில்லை. அதற்குப் பதிலீடாக அனைவருக்கும் புரியக்கூடியது கேளிக்கை அம்சங்கள் மட்டுமே என்பதாகக் கொள்ளப் பட்டுவிட்டது. இந்த நிலையை இப்படிச் செய்ததில் பொது பார்வையாளனின் அரைவேக்காட்டுத்தனங்களும் தமிழ் இயக்குனர்கள் பார்வையாளனைப் பற்றியும் ஊடகத்தைப் பற்றியும் சரிவர புரிந்து கொள்ளாத தன்மையும் சம பங்கு வகிப்பதாகவே தோன்றுகிறது. இதனாலேயே, ‘வணிகப் படம்’ போன்ற அர்த்தமில்லாத வார்த்தைகள் உருக்கொள்கின்றன என்று நினைக்கிறேன். இதனால் விளைவது என, வணிக சினிமா என்பது வெறும் வார்த்தைப் பிரயோகமாக மட்டுமாக மட்டுமல்லாமல், அது ஒரு தனி வகையாகப் புரிந்துக் கொள்ளப்பட்டு அதற்கான சூத்திரங்களும் - என்னவென்று புரியாத நிலையிலேயே செல்லுபடி ஆகுமா இல்லையா என்ற உத்தரவாதம் கூட இல்லாமல் - உருவாக்கம் கொள்ளத் துவங்கிவிட்டன.

சில வருடங்களுக்கு முன் சினிமாக்காரராகும் முயற்சியிலிருந்த நண்பர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தது நினைவுக்கு வருகிறது. பேச்சுக்கிடையில் நண்பர், "எனக்கு ஆர்ட் ஃபிலிம்ல எல்லாம் இன்ட்ரஸ்ட் இல்லீங்க, கமர்ஷியல் படம் எடுக்கனணும்" என்றார். நான், "இரண்டுக்கும் என்ன வித்தியாசம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?என்று கேட்டேன்.

சற்று யோசித்தவர், "ஒருத்தன் முதலில் சைக்கிளில் போறான், சைக்கிள் பஞ்சராயிடுது, பஞ்சரான சைக்கிளைத் தள்ளிக்கிட்டுப் போறான், அப்புடியே ஸ்லோவா படம் நகருது, இப்புடியெல்லாம் போட்டு மனுஷன அறுத்தெடுத்தா அது ஆர்ட் ஃபிலிம். இதுக்கு பதிலா ஸ்பீடா விடு விடுனு நகர்ந்தா அது கமர்ஷியல் படம்". என்றார். மொத்தத்தில் கலைப்படம் என்றால் மெதுவாக நகர்வது, வணிகப் படம் என்றால் வேகமாக நகர்வது என்பது அவர் கொண்டிருந்த புரிதல்.

நான் அவரிடம், "நீங்கள் சொன்ன உதாரணத்தையே எடுத்துக் கொள்வோம், ஒருவன் சைக்கிளில் போகிறான். சைக்கிள் பஞ்சராகி விடுகிறது. தள்ளிக் கொண்டு போகிறான், ஆனால், அந்தக் காட்சிக்கு முன்னதாக அவனது காதலி அவனுக்காகப் பேருந்து நிலயத்தில் காத்துக் கொண்டிருக்கிறாள் என்று காட்டப்பட்டு விட்டது என்று வைத்துக் கொள்வோம். அப்போது படம் வேகமாக நகர்வதாக உணர்வீர்களா அல்லது மெதுவாக நகர்கிறது என்று நினைப்பீர்களா?" என்றேன்.

மெளனம்.

நான் தொடர்ந்து, "சரி, இன்னும் ஒரு படி மேலே சென்று இதே காட்சியை யோசித்துப் பார்ப்போம். அவனது காதலி அவனை நம்பி வீட்டை உதறிக் கிளம்பிச் செல்ல தயாராய் பேருந்து நிலையத்தில் காத்திருக்கிறாள், இருவரது குடும்பச் சூழலும் மோசமாக காதலுக்கு எதிரான நிலையிலிருக்கிறது. இருவீட்டாரும் அவர்களைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.அந்த நிலையில் நண்பனிடம் பணம் புரட்டச் சென்றவனுடைய சைக்கிள் பஞ்சராகி, அவன் விரைவு கொள்ள முடியாமல் போகிறதென்றால், படம் வேகமாக நகருமா? மெதுவாக நகருமா?" என்று அடுத்த கேள்வியைக் கேட்டேன்.

நண்பரிடம் பதில் இல்லை.

இப்படி ஏராளமான இளைஞர்கள், சினிமா பற்றிய குறைவுபட்ட புரிதல்களோடு, வணிகப் படம் என்று எதையோ எண்ணிக்கொண்டு, அதையே தங்கள் வாழ்க்கையின் இறுதி லட்சியமாக்கிக் கொண்டு, தமிழ்நாட்டில் அலைந்து அலைக்கழிகிறார்கள். வெற்றியாளர்களாக அறியப்படும் பல இயக்குனர்களுமே இதுபோன்ற புரிதல்களுடன் இயங்குவதும் அறியமுடிகிறது. இவர்களின் மொத்த புரிதலுமே வணிகப் படம் என்றால் பேர், புகழ், பெண்கள்(!) என்பதாகவும், கலைப்படம் என்றால் பார்வையாளனை அறுத்தெடுத்துக் கொன்று போட்டு விட்டு, விருது (விருது என்பது தமிழ்நாட்டில் அவ்வளவு மலிவானது அதுவே ‘ஆஸ்கர்’ என்றால் ஒஸ்தி!) வாங்கி போட்டோவுக்கு போஸ் கொடுத்துவிட்டு, தெருவில் உதவாக்கரையாகத் திரிவது, என்பதாக இருக்கிறது.

வணிகப் படம், கலைப் படம் என்ற பிரிவினை இப்படி என்றால், இதன் நீட்சியாக ‘மிடில் சினிமா’ என்றொரு புது வார்த்தையையும் உருவாக்கி சமீப காலமாக உருவாக்கிப் புழக்கத்தில் விட்டிருக்கிறார்கள். இந்த என்ற சொல்லின் அடிப்படியில் இன்னும் எத்தனை சூத்திரங்கள் உருவாகி, அதை நம்பி எத்தனை பேர் புறப்படக் காத்திருக்கிறார்களோ தெரியவில்லை.

இப்படி ஏதேதோ பெயரிட்டு தங்களுக்கான சினிமாவினைத் தேர்வு செய்பவர்களுக்கு ஒரு கேள்வி: சில வருடங்களுக்கு முன் ‘டைட்டானிக்’ என்றொரு படம் வெளிவந்து மொழி, இன, கலாச்சார எல்லைகளைத் தாண்டி உலக மக்கள் அனைவராலும் பார்க்கப் பட்டு கொண்டாடப்பட்டது. 11 ஆஸ்கர் விருதுகள் பெற்றது. சமீபத்தில் அதே இயக்குனர் இயக்கிய ‘அவதார்’ என்ற படம் பட்டித தொட்டிகளிலெல்லாம் ஓடிப் பொருள் ஈட்டியது. ‘டைட்டானிக்’, ‘அவதார்’, இவையெல்லாம் வணிகப் படங்களா? கலைப் படங்களா?

உங்கள் பதில் எதுவாக இருப்பினும் எந்த நிலை, எந்தச் சூழலை, எந்த காரணங்களால் எப்படிச் செய்தாலும், இறுதியில் கலையானது தன் இல்லாமை நிலையில் கூட தன் பாதிப்பை (எதிர்மறையாகவாவது) நிகழ்த்தியே தீரும். எவ்வளவுக்கு எவ்வளவு ஒரு சமூகத்தின் மக்கள் கலை உணர்வு கொண்டவர்களாக இருக்கிறார்களோ அவ்வளவுக்கு அவ்வளவு அந்த சமூகம் மேம்படும் வாய்ப்பு ஏற்படுகிறது, மோசமான கலை ரசனை மோசமான சமூக அமைப்பிற்கே வழிவகுக்கும். இதற்கு மாற்று என்று ஒன்றிருக்க வழியில்லை. ஆதிப் புள்ளி முதல் சிந்தனையை கலை வழி மட்டுமே மீட்டி, அனுபவமாக்கி, சேகரித்து வந்துள்ள மனித மனதால் சட்டென்று ஒரு கலை சார்ந்த ஊடகத்தைக் கேளிக்கைக்குரிய சாதனம் என்று சொல்லித் துண்டித்துக் கொண்டுவிட முடியாது. இதற்கு, சினிமாவுக்கு எந்த ஒரு கலை மதிப்பையும் கொடுக்கத் தயாராக இல்லாத தேசத்தில் சினிமா சம்பந்தப்பட்டவர்களே ஆட்சியாளர்களாகிவரும், கிரிக்கெட் உட்பட சினிமாயின்றி எந்தத் துறையும் இயக்கம் கொள்ள முடியாமல் நீர்த்துப் போய் நிற்கும். நம் சமூகத்தின் இன்றைய நிலையே சாட்சி.

பொதுவானதொரு பார்வையாளன் சினிமா பார்ப்பது என்று முடிவு செய்து நேரத்தினை அதற்கு செலவிடத் துவங்கிவிட்டால், பின் அவன் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அவன் ரசிக்கும் விதத்திற்கு ஏற்றபடி அதன் பாதிப்பு அவன் மனதில் இருந்தே தீரும். காரணம், என்ன பெயரிட்டு நாம் அழைத்தாலும், ஒரு சில நொடிகள் ரசித்துப் பார்த்துவிட்டு விலகிக் கொள்ள சினிமா என்ற ஊடகம் எந்த நிலையிலும் முழுக்க முழுக்க வணிகம் சார்ந்த விளம்பரப் படம்
அல்ல.

ஆனந்த் அண்ணாமலை

name