About

VADDU KODDAI EAST, Jaffna, Sri Lanka
We the Maruthanayagam boys, a great gang of youngsters of Vaddukoddai East, dominated the whole Jaffna during late 90's and early 2000 with our skills in soft-ball cricket. As a group of energetic,creative and skillful kids we started a softball cricket team called WINBIRDS 0n 1995. We started practicing cricket in a small empty space, which belongs to one of our friends, which is called Maruthanayagam stadium.(the story behind this name will be posted later) We were the top soft ball team in the Chankanai division and one among the top four in Jaffna district until we dissolved our team due to the unwanted situations in Jaffna during 2006/07. Now we are settled indifferent jobs in different places. Even though we are living different lives allover the world we all are still MARUTHANAYAGAM BOYZ. ONE FOR ALL! ALL FOR ONE!

Monday, June 14, 2010

ஒரு சர்ச்சைக்குரிய புத்தகம்

முற்றிலும் வித்தியாசமான சுற்றுச்சூழல் கொண்ட- இயற்கை வெப்பமும் ஆழ்ந்த மனித உணர்ச்சிகளின் கொதிகளனுமாக இருந்த அமெரிக்க தென் கிழக்கு மாநிலங்களில் 30களின் மகத்தான பொருளாதாரத் தேக்ககால பின்புலத்தில் ஒரு கதை பிறந்தால் எப்படி இருக்கும்? மனத்தை மட்டும் உலுக்காது- பூமி நடுங்கும் . பூகம்பம் வெடிக்கும்.

அமெரிக்காவில் இந்தக் கோடை முழுவதும் ஐம்பது ஆண்டுகள் முன்பு பெறும் சலசலப்பை ஏற்படுத்திய அப்படிப்பட்ட ஒரு புத்தகத்தைக் கொண்டாடும் நிகழ்ச்சிகள் நடக்கவிருக்கின்றன. சில ஆண்டுகளுக்கு முன்பு பிரிட்டிஷ் நூலகர்கள் வாழ்நாளுக்குள் எல்லோரும் அவசியம் படிக்கவேண்டிய புத்தகம் என்று சிலாகிக்கப்பட்ட புத்தகம். படிக்கவேண்டிய மிக முக்கியமான 10 புத்தகங்கள் பட்டியலில் பைபிள், ஜேன் ஆஸ்டினின் ப்ரைட் அண்ட் ப்ரஜுடிஸ், ஆர்வெல்லின் '84 போன்ற புத்தகங்களைப் பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்த புத்தகம்- ‘To Kill a Mocking Bird’ 1960- ஜூலை மாதம் அமெரிக்காவில் வெளிவந்தது. '62-ல் திரைப்படமாக்கப்பட்டது. மனத்தை நெகிழவைக்கும் பிரதான பாத்திரத்தில் க்ரெகரி பெக் அற்புதமாக நடித்திருக்கிறார். சிறந்த படத்துக்கான ஆஸ்காரைப் பெற்ற கதை. ஆசிரியருக்கு பெருமைமிக்க ‘புலிட்சர்’ பரிசும் அமெரிக்க அதிபரின் விடுதலை விருதும் கிடைத்தது. அதற்குப் பிறகு அவர் வேறு புத்தகமே எழுதவில்லை. இன்னமும் அந்தப் புத்தகத்தைப் பற்றி உலகம் எங்கும் பேசப்படுகிறது. பள்ளிகளில் பாடப்புத்தகமாக வைக்கப்படுகிறது. அமெரிக்காவில் சர்ச்சிக்கப்படுகிறது. வெளிவந்த காலத்திலிருந்து ஆண்டுக்குப் பத்து லட்சம் படிகள் விற்பனை ஆகின்றன. 40 மொழிகளில் மொழிபெயர்ப்பு பெற்ற நாவல். ஜூலையிலிருந்து துவங்கி மூன்று மாதங்களுக்கு அமெரிக்கா முழுவதும் புத்தகம் வாசிக்கும் நிகழ்ச்சியும் திரைப்படக் காட்சிகளும் நடத்தப்படும்.

ஆனால் அதன் ஆசிரியர் ஹார்பர் லீ என்ற பெண் கூச்சத்துக்குப் பேர் போனவர். விளம்பரத்தை வெறுப்பவர். தான் எழுதிய மாத்திரத்தில் புத்தகத்துக்குக் கிடைத்த பிரபல்யத்தைக்கண்டு அரண்டு தன்னை மறைத்துக் கொண்டவர். அலபாமாவில் தான் பிறந்த சிறிய கிராமத்தில் ஓய்வு மனையில் வசிக்கும் 84 வயது லீ இந்தக் கொண்டாட்டங்களில் பங்கு கொள்ளமாட்டார் நிச்சயம்.

அத்தகைய பெண் ஒரு மிகத் துணிச்சலான கதைக் கருவைப் பின்னி புத்தகம் வெளிவந்த உடனடியாக உலகின் பார்வைக்கு வந்தது அதிசயம்தான். இனவாதத்தை மையமாகக் கொண்ட –‘To Kill A Mocking Bird-‘ அமெரிக்காவின் தேசியப் புதினமாகக் கருதப்படுகிறது. அதிகத் துறுதுறுப்புடன் இருந்த ஒரு சிறுமியின் பார்வையில் நகைச் சுவையும் அங்கதமும் இழையோட மிகக் கனமான கதைப் பொருளை மிக லாவகமாக உணர்ச்சிப் பெருக்கில்லாமல் கோஷமில்லாமல் சொல்லப்பட்டிருப்பதே நாவலின் பலம். நட்புகள், குடும்ப உறவுகள், குழந்தைப் பருவத்திலிருந்து குமரிப் பருவத்துக்கு வளரும் காலகட்டம் இவற்றிற்கு இடையே சிறுமி தான் காணும் இனவாதத்தையும் கருப்பர்களுக்கு இழக்கப்படும் அநீதியையும் முதியவர்களின் அரசியல் பார்வையில் அல்லாமல், அப்பாவித்தனமாக உணர்ந்து அதிர்வதும் மனத்தளவில் வளர்வதும் மிக இயல்பாக வெளிப்படுகிறது. கருப்பர்களின் ஸிவில் ரைட்ஸ் போராட்டத்தின் இறுதியில் சரியான தருணத்தில் வந்த நாவல். படித்த வெள்ளையருக்குக் குற்ற உணர்வை ஏற்படுத்திற்று. கருப்பர்கள் பலருக்கு கருப்பர் பாத்திரம் மேலோட்டமாக எழுதப்பட்டிருப்பதாக அதிருப்தி ஏற்பட்டது.

மேகோம்ப் என்ற சிறிய கிராமம். அங்கு ஸ்கௌட் என்ற சிறுமியும் அவளைவிட நான்கு வயதுப் பெரியவனான அண்ணன் ஜெம்மும் மனைவியை இழந்த தந்தையும் வழக்கறிஞருமான அட்டிக்கஸ் ஃபின்சுடன் வசிக்கிறார்கள். பக்கத்து வீட்டில் தில் என்ற ஒரு சிறுவன் அவளுக்கு நண்பன். அசாத்திய கற்பனைத்திறனும் ஆர்வமும் உள்ளவன். ஸ்கௌட் அவனுக்கு சரியான ஜோடி. இன்னொரு பக்கத்து

வீட்டில் ஒரு மர்ம மனிதர் யார் கண்ணிலும் படாமல் வசிக்கிறார். அவரைப்பற்றின கற்பனைக் கதைகளை இருவரும் பின்னுவதில் மும்முரமாகிறார்கள். அவர்களுக்குத் தெரியாமல் மரத்தடியில் சில பரிசுப்பொருள்களை அவர் விட்டுச் செல்வதை அவர்கள் பின்னால் உணர்ந்து வியக்கிறார்கள். கதையின் முக்கியமான பகுதி நீதிமன்றத்தில் நடக்கும் வழக்கு. ஒரு கருப்பர்,டாம் ராபின்சன், ஒரு வெள்ளைப் பெண்ணைப் பாலியல் பலாத்காரம் செய்ததாக அநியாயமாகப் பழிசுமத்தப்பட்டிருக்கிறான். நேர்மையும் மனித நேயம் மிக்கவருமான அட்டிக்கஸ் ஃபின்ச் டாமுக்காக வாதிட ஆஜராகிறார். கிராமத்து வெள்ளையர்கள் அவரை ஏசுகிறார்கள். சாட்சியங்கள் டாம் குற்றமற்றவன் என்று தெளிவாகக் காட்டியும் ஜூரி அவனுக்கு மரண தண்டனை அளிக்கிறார். சிறையிலிருந்து தப்பிக்க முயன்ற டாம் கடைசியில் சுடப்பட்டு இறந்து போகிறான். கருப்பரின் மேல் பழிசுமத்திய வெள்ளைப் பெண்ணின் தந்தை அட்டிக்கஸ்ஸைப் பழிவாங்கும் வெறியில் அலைகிறார். குழந்தைகளையும் துரத்தி தாக்கவரும் சமயத்தில் பக்கத்து வீட்டு மர்ம மனிதர் அவர்களைக் காப்பாற்றுகிறார்.





'Mocking bird' எனும் பறவை யாருக்கும் தீங்கு செய்யாதது , அதைக் கொல்வது பாவம் என்று ஸ்கௌட்டின் தந்தை ஒரு இடத்தில் சொல்வார். இனவாதப் பழிகளின் அடையாளமாக புத்தகத்தின் உருவகத் தலைப்பாக லீ அதை உபயோகிக்கிறார். இந்த நாவல் கிட்டத்தட்ட அவரது சுய சரிதை என்று சொல்லப்படுகிறது. அவருடைய தந்தையும் கருப்பருக்காக வாதாடிய வழக்கறிஞர். முக்கியமாக ஸ்கௌட்டின் சினேகிதன் தில், லீயின் பால்ய நண்பனான ட்ரூமன் கப்போட்டி என்று சொல்லப்படுகிறது. கப்போட்டியும் லீயும் 60களிலும் நண்பர்களாக இருந்தார்கள் . இருவரும் சேர்ந்து ஒரு மொத்த குடும்பம் கொல்லப்பட்ட இடத்திற்குச் சென்று விவரம் சேகரித்த கதை சுவாரஸ்யமானது. ‘In cold blood’ என்ற புத்தகத்தை கப்போட்டி எழுதி புகழ்பெற்ற விதமும் அது ஏற்படுத்திய பாதிப்பும் அற்புதமாக ட்ரூமன் கப்போட்டி என்ற தலைப்பில் ஹாலிவுட் படமாக்கியிருக்கிறது. அதில் ஹார்ப்பர் லீயின் பாத்திரமும் உண்டு. கப்போட்டி லீயின் புகழைக்கண்டு பொறாமைப்பட்டார் என்று சொல்லப்படுகிறது.

‘In cold blood’க்கான ஆய்வு கப்போட்டியின் மனநிலையை வெகுவாகப் பாதித்தது. லீயைப் பிறகு அவர் சந்திக்கவே இல்லை.

லீயின் புத்தகத்துடன் ‘புக்கர்’ பரிசு பெற்ற அருந்ததி ராய் சம்பந்தப்படுத்தப்பட்டு விமர்சனத்துக்குள்ளாகியிருக்கிறார். அது வேறு சர்ச்சை.

No comments:

Post a Comment

name